இந்தியா செல்லும் ஜனாதிபதிக்கு அழுத்தங்களை வழங்குங்கள்: யாழ்.கடற்றொழிலாளர் அமைப்புக்கள் கோரிக்கை
இந்தியா செல்லும் ஜனாதிபதிக்கு இந்தியா கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டியை கடற்றொழிலை கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை வழங்க வேண்டும் என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் கோரிக்கை முன்வைத்தார்.
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்று (07.07.2023) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்ல உள்ளார்.
இந்திய பிரதமருக்கு அழுத்தம்
இவ்வாறு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர் கதையாகியுள்ள இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களை நிறுத்தமாறு இந்தியா பிரதமருக்கு அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்.
அது மட்டுமல்லாது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ஜனாதிபதிக்கு அழுத்தத்தை வழங்குவதோடு டக்ளஸ் தேவானந்தாவும் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்றார்.
குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட நெடுந்தீவு கடற்தொழில் சமாசத்தின் உறுப்பினர் குறுஸ் கருத்து தெரிவிக்கையில்,
நெடுந்தீவில் சுமார் 850 மேற்பட்ட கடற்றொழிலாளர் குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் அத்துமீறிய இந்தியா ரோலர் படகுகளினால் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட கடற்றொழில் உபகரணங்கள் நாசமாக்கப்பட்டுள்ளது.
இந்தியா ரோலர் படகுகளின் அத்து மீறிய செயற்பாடு காரணமாக எமது வளங்கள் பாதிக்கப்படும் நிலையில் இதுவரை 250 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல குடும்பங்களின் மனைவிமார்களுடைய தாலியை அடகு வைத்து பலர் வலைகளை வாங்கியுள்ள நிலையில் இந்திய ரோலர் படகுகளினால் குறித்த வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எமது ஆதங்கங்களை இந்திய பிரதமருக்கு பகிருமாறு கோரிக்கை விடுத்தார்.
அனுமதியற்ற சட்டவிரோத கடற்றொழில்
வலி வடக்கு கடைத் தொழிலாளர் சம்மேளனத் தலைவர் றீகன் கருத்து தெரிவிக்கையில்,
உள்ளூரில் அனுமதியற்ற சட்டவிரோத கடற்றொழில் முறைகளைப் பயன்படுத்தி கடற்றொழில் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
இதன் காரணமாக சிறிய மீன்கள் பெருமளவு தடை செய்யப்பட்ட வேலைகளில் அகப்படுவதனால் அதனை கடலிலோ தரையிலோ வீசி விட்டு செல்கிறார்கள்.
அதன் காரணமாக கடற்றொழிலை நம்பி இருக்கும் பாரம்பரிய கடற்றொழிலாளர் கடலில் மீன் இனங்கள் பெருகாத நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |