அடுத்துவரும் 24 மணிநேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை (12) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை பெய்யக்கூடும்
கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடற்பரப்புகளில் ஓரளவு கொந்தளிப்பு
காற்றானது கிழக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து மணிக்கு 25-35 கி.மீ வேகத்தில் வீசும்.

சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் மணிக்கு 45 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.