சாப்பிடுவதற்காக சொத்துக்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ள இலங்கையர்கள்-சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம்
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 24 லட்சம் மக்கள் வரையறை செய்யப்பட்டுள்ள சர்வதேச வறுமை கோட்டுக்கும் கீழே சென்றுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறியவர்களை பாதித்துள்ள இலங்கையின் பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வறிய குடும்பங்களைளே அதிகளவில் பாதித்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக வறியவர்கள் அல்லாத குடும்பங்களை விட வறிய குடும்பங்களின் வருமானம் பாதியாக குறைந்துள்ளது.
இலங்கையர்கள் தமது சொத்துள்ளகளை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். வாழ்க்கை செலவுக்காக கடனாளிகளாக மாறியுள்ளனர் எனவும் செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வறிய குடும்பங்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதை கைவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கையர்களில் 57 லட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.
இவர்களில் 49 லட்சம் மக்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கி வருகின்றனர். சிறார்கள், கர்ப்பிணி தாய்மார், பாலுட்டும் தாய்மார், அங்கவீனமுற்ற நபர்கள், பெண்களை அடிப்படையாக கொண்ட குடும்பங்கள், இடம்பெயர்ந்தவர்கள், அகதிகள், மலையக மக்கள், சிறிய மதங்களை சேர்ந்த அணியினர் பொருளாதார நெருக்கடி காரணமாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக விசேட தேவையுள்ள நபர்கள்,முதியோர், அங்கவீனமுற்றோருக்கு வழங்கப்படும் உதவிகளும் பொருளாதார நெருக்கடி காரணமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்த தரப்பினர் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
57 லட்சம் மக்கள் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்
இதனிடையே 57 லட்சம் இலங்கையர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக கஷ்டங்களை அனுபவித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் மருந்து தட்டுப்பாடு காரணமாக சுமார் 20 லட்சம் மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். கமத்தொழில் உபகரணங்கள் மற்றும் இரசாயன பசளை ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாலும் பசளை சரியாக கிடைக்காத காரணத்தினாலும் 35 லட்சம் இலங்கையர்கள் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் வருமானம் இல்லாத காரணத்தினால்,தேவையான உணவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக 25 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.