டுபாய் - இந்தியா மற்றும் கனடாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்
டுபாய், இந்தியா மற்றும் கனடாவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இருபதிற்கும் மேற்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க(Buddika Manathunga) தெரிவித்தார்.
பாதாள உலகத் தலைவனான லொகு பெட்டியை இந்நாட்டிற்கு அழைத்து வந்ததோடு, கடந்த சில மாதங்களில் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட 11வது நபர் இவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்
வெளிநாடுகளில் இலங்கையில் குற்றங்களைச் செய்யும் பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கான சிறப்புத் திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது வெளிநாடுகளில் உள்ள பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.