இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பில் சிக்கியுள்ள பாதாள உறுப்பினர்கள்: தீவிரமாகும் இராஜதந்திர பேச்சுவார்த்தை
வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பல இலங்கை பாதாள உலக நபர்களை திருப்பி நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து குற்றப்புலனாய்வுத் துறை (CID), இன்டர்போலின் உதவியுடன், இராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்டர்போலின் சிவப்பு அறிவிப்புகளைக் கொண்ட 15 இலங்கை பாதாள உலக நபர்கள் ரஷ்யா, ஓமன்,டுபாய் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சமீபத்தில் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.
நாடுகடத்தல் செயல்முறையை எளிதாக்குவதற்காக CID தொடர்புடைய அதிகாரிகள் வெளிநாட்டு அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
200 இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு
“சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே நாடுகடத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் திட்டமிடப்பட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள குற்றவாளிகள் ஐக்கிய அரபு இராச்சியம், இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா, கனடா, ரஷ்யா, ஓமன் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை பொலிஸ் கடந்த ஆண்டுக்குள் சுமார் 200 இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளை கோரியுள்ளது.
இதன் விளைவாக, உயர்மட்ட பாதாள உலகக்குழுத்தலைவர் கெஹல்பத்தர பத்மே' உட்பட குறைந்தது 17 சந்தேகநபர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
'கமாண்டோ சாலிந்தா', 'பெக்கோ சமன்', 'தெம்பிலி லஹிரு' மற்றும் 'குடு நிலந்தா' என்ற புனைப்பெயர்களால் அழைக்கப்படும் பத்மசிறி மற்றும் அவரது நண்பர்கள் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் சந்தேக நபர்களைக் கைது செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.
இதில் சிவப்பு அறிவிப்புகளை வெளியிடுவது மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவது ஆகியவை அடங்கும். தேடப்படும் சந்தேகநபர்களின் தரவுகளை பொலிஸார் பராமரித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



