தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கு அணி திரள அழைப்பு..
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகியுள்ளது.
அந்தவகையில் தமிழின படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (18) காலை 6 மணிதொடக்கம் 9.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர் நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் காலை 10.15 மணிக்கு கொள்கைப்பிரகடனம் வாசிக்கப்படும் 10.29 க்கு நினைவொளிக்கு நினைவொளி எழுப்பபடும்.
10.30 க்கு அகவணக்கமும் 10.31 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்பட்டு 10.35 மணிக்கு மலர் வணக்கம் செலுத்தப்படும்.
பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங், தமிழின படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் உணர்வுகளோடு அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து பங்கேற்குமாறு அன்புரிமையுடன் அழைப்பு நிற்கின்றோம். நாம் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை சந்தித்த மக்கள்.
அந்த அநீதிக்கு எதிராக எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியும், நீதியை கோரியும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஒன்றுகூடி கொண்டிருக்கின்றோம். இந்த நிகழ்வுக்கான ஆயத்தப் பணிகளில் பிரதேச மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பல தரப்பினரும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
அவர்களது பங்களிப்பிற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே அரசியலை கடந்து தமிழ் தேசமாக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எமது எதிர்ப்பை உறுதியாக பதிவு செய்து, எமது நீதிக்கான குரலை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்.
ஆகையால் அனைத்து தமிழ் மக்களும் அணி திரண்டு வந்து இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்குமாறு முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பு சார்பில் அன்புடன் அழைத்து நிற்கின்றோம் என தெரிவித்துள்ளார்.