பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது!
உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியே வெளியுறவுக் கொள்கை யாரை நண்பராக்க வேண்டும் என்பதை விடவும், யாரைப் பகைவராக்கக் கூடாது என்பது முதன்மையானது.
தேசிய விடுதலைப் போராட்டமானது அடிப்படையில் சர்வதேசப் பண்பையும், பரிமாணத்தையும் கொண்டது. சர்வதேச உறவு என்பது தங்கத் தாம்பாளத்தில் நீட்டப்படும் தேனும் பாலுமல்ல.
அது நாடுகள் தத்தம் நலன் சார் அடிப்படையில் கொடுக்கல் வாங்கல் என்ற வடிவில் இரத்தமும், தசையுமான ஒரு பதநீர். ”வெளியுறவுக் கொள்கை என்பது எப்பொழுதும் உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியே" என்ற கருத்தும் கவனத்திற்குரியது.
அதாவது உள்நாட்டில் ஒடுக்குமுறையைச்செய்யும் ஓர் அரசு, அதற்குப் பொருத்தமாகவோ அல்லது இசைவாகவோதான் வெளிநாட்டுக் கொள்கைகளை, உறவுகளை வகுத்து வைத்திருக்கும்.
வெளிநாட்டுக் கொள்கை
ஒரு யுத்தத்தின் போதும், உள்நாட்டில் ஒருங்கிணைந்த கூட்டின்றியும் ( United front), வெளிநாட்டில் அணியின்றியும் (Alliances), ஓர் அரசால் இலகுவில் தலையெடுக்க முடியாது.

ஆதலால், ஒரு நாட்டின் யுத்த பங்கெடுப்பானது உள்நாட்டில் கூட்டும், வெளிநாட்டில் அணியுமென இரு சக்கரங்களைக் கொண்டு சுழலும். யுத்தமென்று வந்தால் யுத்தம்தான் நியாயம், யுத்தம்தான் தர்மம். அதில் நீதி , மேன்மை என்பனவெல்லாம் எந்த தர்மங்களுமற்ற, கொடூரமான இரத்த ஆற்றில் மிதந்து, பின் வெல்பவனின் கையின் வழியே நிலை நிறுத்தப்படும் நீதியாகவே மேலெழுந்து நிற்கும்.
இந்நிலையில் வண்டியும், குதிரையும் கையிலிருந்தாலும் வண்டியைக் குதிரைக்குப் பின்னால் பூட்ட வேண்டுமே தவிர குதிரைக்கு முன்னாலல்ல. இலட்சியத்தைக் காவிச் செல்லும் வண்டியைக் குதிரைக்குப் பின்னால் தான் பூட்ட வேண்டும் என்பதுடன், கூடவே நொண்டி குதிரையையும் பூட்டிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தரையின் யதார்த்த இயல்புக்கு ஏற்பதான் வண்டியை வடிவமைக்கவும் வேண்டும், வண்டியை ஓட்டவும் வேண்டும். மேற்படி இவை பற்றிய ஞானங்களுக்கு உட்பட்டதே அல்லது கீழ்ப்பட்டதேதான் வெளியுறவு கொள்கை.
அரசற்ற, தேசிய விடுதலைப் போராட்ட வரலாறுகளின் யதார்த்தம்
அரசற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள் சம்பந்தமாக உலகம் தழுவிய நீண்ட வரலாறானது நம் உச்சந் தலையில் அடித்துச் சொல்வது என்னவெனில், பலம் பொருந்திய ஒரு வெளிநாட்டின் வெளிப்படையான நேரடி ஆதரவும், உதவியுமின்றி, எந்தவொரு தேசிய இனமும் விடுதலை அடைய முடியாதென்பதே.
"சொந்தக் காலில் நின்று , சொந்தப் பலத்தில் நின்று போராடுவோம்" என்று கூறப்படும், ஒரு கவிஞனின் நாடகப் பாடல் போன்ற வரிகள் எல்லாம் ரசிகனுக்கு சொர்க்கத்தைத் தரலாம் ஆனால் இன விடுதலைக்கு அது புதைகுழியைத்தான் தரும்.
பாலஸ்தீனம் - இஸ்ரேல்
54 கோடி இஸ்லாமிய மக்கள் தொகையைக் கொண்ட வளைகுடாவை உள்ளடக்கிய மத்திய கிழக்கு எனப்படும் மேற்காசியா-வாழ் இஸ்லாமியர்களுக்கு, வெறும் 65 லட்சம் யூத மக்களினத்தைக் கொண்ட இஸ்ரேல் சிம்ம சொப்பனமாக விளங்குவதற்கு , அதற்கு இருக்கக்கூடிய பலம் பொருந்திய வெளியுறவு அணி முக்கிய அடிப்படையாகும்.
அதாவது, இஸ்ரேலுக்கு சர்வதேசம் என்பது அதன் முதலாவது அர்த்தத்தில் அமெரிக்காவும், அதன்வழியே மேற்கு ஐரோப்பாவும், தொடர்ந்து நேட்டோ நாடுகளுமாகும். இத்தகைய பலம் வாய்ந்த வெளியுறவு நாடுகளின் உறவின்றி 54 கோடி இஸ்லாமியர்களை, இஸ்லாமிய அரசுகளை, இஸ்ரேலால் எளிதாக கையாண்டுவிட முடியாது.

இத்தனைக்கும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமானது உலகெங்கும் வாழும் 200 கோடி இஸ்லாமியர்களின் ஆதரவைப் பெற்றதொன்று என்பதும் கவனத்திற்குரியது. இவற்றையெல்லாம் மீறித் தனது பலம் வாய்ந்த வெளியுறவுக் கொள்கைக் கையாளலின் துணையுடன், இஸ்ரேல் தனது உள்நாட்டு வெளிநாட்டு அரசியலை முன்னெடுக்கின்றது.
படுகொலைகளை நிறைவேற்றுகிறது; சுற்றி வளைத்து பட்டினி போட்டே கொல்கிறது. இங்கு காணப்படும் சரி - பிழை , நல்லது - கெட்டது, பாவம் - புண்ணியம் என்பவற்றிற்கப்பால் அரசியல் யதார்த்தம் இப்படித்தான் இருக்கின்றது என்பதே நம் முகத்தில் அறையப்படும் உண்மையாகும்.
ஈழத்தமிழரின் போதாமை
கடந்த 16 ஆண்டுகளாகத் தமக்கு நேர்ந்த இனப்படுகொலை குறித்து ஈழத்தமிழர் ஐ.நா நோக்கி அல்லது மனித உரிமை ஆணையத்தின் முன் காவடியாடினாலும், ஒவ்வொரு வருடமும் காவடியாட்டம் முடிந்த பின்பு ஒப்பாரி ஆறாய்ப் பாய்வதைத் தவிர பால் செம்பு கூட மிஞ்சுவதில்லை. ஐ.நா என்பது உலகிலுள்ள 196 அரசுகளின் சபை.
அவர்களின் சபையில் அரசற்ற இனங்களுக்குப் பலம் பொருந்திய வேறு அரசுகளின் துணையின்றி விடிவில்லை. ஈழத்தமிழர் ஐநாவுக்கு காவடி தூக்கும் முன்பு, பலம் பொருந்திய அரசுகளின் உறவை, ஆதரவை நாட வேண்டும். வாழ்வில் "கெட்டவனேயானாலும் அவனுக்கும் நண்பர்கள் இருப்பர்" என்ற ஆபிரகாம் லிங்கனின் கூற்றுக்கிணங்க எந்த ஒரு நாட்டுக்கும் நண்பர்கள் இருப்பர்.
எனவே ஒரு நாட்டின் உறவு உருவாகும் போது அந்த நாட்டின் நட்பு நாடுகளும் கூடவே அணி சேரும் வாய்ப்புண்டு. இஸ்ரேலுக்கு அமெரிக்கா பலமான நண்பனாகவிருக்கும் பின்னணியிற்தான் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் உதவியும், உறவும் இஸ்ரேலுக்குக் கிடைக்கிறது.
பங்களாதேஸ் - தைவான் - ரஷ்யா - யூகோஸ்லாவிய உதாரணங்கள்
குறைந்தபட்சம் இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்பு விடுதலையடைந்த அரசற்ற தேசிய இனங்களை எடுத்துக் கொண்டால் சோவியத் யூனியனுடனான இந்திய அரசின் நேரடித் தலையீட்டினால்தான் பங்களாதேஸ் விடுதலையடைத்தது. அதுவும் 30 லட்சம் வங்காள மக்கள் படுகொலைக்குள்ளான பின்னணியில் தான் நிகழ்ந்தது.
இன்றுவரை கடந்த முக்கால் நூற்றாண்டுக்கு மேலாய், மிகப்பெரும் வல்லரசான சீனாவால், குட்டி நாடு தாய்வானை ஆக்கிரமிக்க முடியாமல் போயிருப்பதற்குக் காரணம் தாய்வான் மேற்கொள்ளும் அமெரிக்க - ஜப்பானிய சார்பு உறவுகளே. பனிப் போர் முடிந்ததும் ரஷ்யாவிலிருந்து 14 தேசிய இனங்களுடைந்து பிரிந்து சென்று சுதந்திர தனியரசுகளை அமைக்கக் கூடியதாய் இருந்தமைக்கு அவை மேற்கொண்ட மேற்குலக சார்புக் கொள்கைகளும், மேற்குலக நாடுகளின் தெளிவான ஆதரவுகளும் வலுவூட்டியது ஒரு முக்கிய காரணம்.

யூகோஸ்லாவிய அரசின் தேசிய இன ஒடுக்கு முறைகளையும், இனப்படுகொலைகளையும் எதிர்த்து அந்த இனங்கள் பலமான அமெரிக்க உறவை நாடியதன் பின்னணியில், ஒரு யூகோஸ்லாவியா உடைந்து அங்கு ஏழு புதிய அரசுகள் உருவாகின.
இறுதியாக அங்கே நடந்த இனப்படுகொலைகளுக்குக் காரணமான சனாதிபதி மிலோசவிக், அமெரிக்க ஆதரவுடன் கைது செய்யப்பட்டு, சர்வதேச விசாரணைக் கைதியாய் சிறையில் உயிர் நீத்தார்.
திபெத்திய விடுதலை
திபெத்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இந்தியா பேராதரவளித்தது. ஆயினும் இந்தியாவை விடப் பலம்பொருந்திய நாடான சீனா, மலைக்குள் சிக்குண்டிருந்த திபேத்தைக் கிடுக்குப் பிடிக்குள் வைத்துக் கொண்டு, 1962 ஆம் ஆண்டு இந்தியாவின் அக்சாய் சின் பகுதியில் பாரிய யுத்தத்தை நடத்தியதன் வாயிலாக இந்தியாவைத் தோற்கடித்து தன் ஆக்கிரமிப்பை வலுப்படுத்திக் கொண்டது. நடைமுறையில் சீனாவின் நட்புறவின் அவசியம் கருதி, குறுகிய காலத்தினுள்ளேயே திபேத்திற்கான ஆதரவிலிருந்து நடைமுறையில் இந்தியா பின்வாங்கியது.
திபேத்தின் சிக்கலான புவியியல் அமைவிடம் காரணமாக மலைவாழ் திபேத்தியர்களை பாதுகாக்க முடியாதென்ற காரணத்தினாலும், சீனாவுடனான சந்தை வாய்ப்பை மனதிற் கொண்டும் அமெரிக்காவால் திபேத்தியர்களுக்கான தார்மீக ஆதரவைத் தவிர வேறு எதனையும் செய்ய முடியவில்லை.
குர்தீஸ் இன விடுதலைப் போராட்டம்
ஈராக் வாழ் ஒடுக்கப்படும் குர்திஸ் இன மக்கள் மத அடிப்படையில் இஸ்லாமியர்களாகவே இருந்த போதிலும், ஒடுக்கும் இஸ்லாமிய ஈராக்கிய அரசுக்கு எதிராக, போராடிய குர்திஸ் மக்களுக்கு இஸ்லாமிய நாடுகள் எதுவுமே ஆதரவளிக்காத நிலையில், குர்தீஸ் இன மக்கள் பாரிய இனப்படுகொலைக்கு ஆளானார்கள்.
யாரும் உதவிக்கு வராத இந்தப் பின்னணியில், உதவிக் கரம் நீட்டிய அமெரிக்காவின் ஆதரவை குர்தீஸ் மக்கள் இறுகப் பற்றிப் பிடித்தனர். சதாம் உசைனை வீழ்த்துவதற்கும், மேற்காசியாவில் இஸ்லாமிய மக்கள் கூட்டம் ஓன்றின் ஆதரவைத் தான் பெறுவதற்கும் வாய்ப்பாக ஈராக்கிய குர்திஸ் இன மக்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது.
ஆனாலும் ரஷ்யாவுக்கு எதிராக தனது படைத்தளத்தை துருக்கியில் கொண்டுள்ள அமெரிக்கா, தனது நேட்டோ நண்பனான துருக்கியைப் பகைக்க கூடாது என்பதற்காக, குர்திஸ் மக்கள் விடுதலையடைந்து தனித்த சுதந்திர அரசையமைக்கும் கோரிக்கையை மறுத்தது. எனவே அமெரிக்கா, சிறிது மட்டுப்படுத்தப்பட்ட வகையில், தனக்குப் பொருத்தமானதும் அங்குள்ள குருதிஸ் மக்களுக்கு ஓரளவு ஆதரவளிக்க கூடியதுமான நிலைப்பாட்டை ஒரு சமஸ்டித் தீர்வாக முன்னெடுத்தது.

ஈராக்கிய - குருதிஸ் நிலப் பரப்போடு ஒட்டியவாறு, துருக்கியில் குருதிஸ் இன மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் , அவர்களும் தமது சுதந்திரத்திற்காக துருக்கி அரசை எதிர்த்து போராடும் நிலையில், துருக்கி அரசானது அருகில் உள்ள ஈராக்கிய குர்திஸ் மக்களின் சுதந்திர அரசமைப்பதற்கான விடுதலைப் போராட்டத்தை.
ஒரு போதும் ஆதரிக்காது என்பது தான் யதார்த்தம். இப்பின்னணியில், அமெரிக்க ஆதரவுடன், குறைந்தபட்சம் அமெரிக்கா நீட்டும் சமஸ்டித் தீர்வு ஒன்றைப் பெறுவதைத் தவிர, ஈராக்கிய குருதிஸ் இன மக்களுக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. "பசித்திருப்பதில் கஞ்சி மேல்" என்ற அடிப்படையில் சோறு இல்லாட்டாலும் கஞ்சியென்ற வகையில், அமெரிக்க ஆதரவுடன் குர்திஸ் இன மக்கள் ஒரு சமஸ்டி ஆட்சி அலகைப் பெறத் தலைப்பட்டனர்.
இனப்படுகொலையா ஏகாதிபத்தியமா, எது அதிகம் ஆபத்தானது என்று நோக்குகையில், படுகொலையே அதிகம் ஆபத்தானது மற்றும் உடனே தடுக்கப்பட வேண்டியது என்ற யதார்த்தபூர்வ நோக்கு நிலையில் இருந்து, குருதிஸ் மக்கள் ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்தனர்.
இதனையே இன ஒடுக்குமுறைக்கும், இனப் படுகொலைகளுக்கும் உள்ளான யூகோஸ்லாவியா வாழ் தேசிய இனங்களும் தங்கள் அனுகுமுறையாக எடுத்துக்கொண்டன. எனவே அரசற்ற ஒரு தேசிய இனம் ஒரு பலமான வெளியரசின் ஆதரவின்றித் தனித்து தனக்கான இலக்கையடைய முடியாதென்பது ஒரு புறமிருக்க, அத்தகைய வெளியரசுகளும் தாம் ஆதரவளிக்கக்கூடிய மக்களுக்கான புவியியல் அரசியற் சூழல், அந்த வெளியரசுக்குப் பொருத்தமாக இல்லாது விட்டால் அத்தகைய வெளியரசுகளின் ஆதரவையும் பெற முடியாது. இதற்கு திபெத் ஒருமுனை உதாரணம். குர்திஸ் இன்னொரு முனை உதாரணம்.
வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்போம்
ஒரு விடுதலைப் போராட்டத்தையோ, அல்லது ஒரு உரிமைப் போராட்டத்தையோ அது சார்ந்த யதார்த்தத்திலிருந்து, கூடவே அது சார்ந்த புவிசார், அரசு, அரசியல் பரிமாணத்துக்குப் பொருத்தமாகவே அணுகவும் அடையவும் முடியும்.

புவியியல் மற்றும் அரசியற் சூழலியல் என்பனவற்றின் பின்னணியில், அரசுகளின் நலன் சார்ந்த கொடுக்கல் - வாங்கல் என்ற அடிப்படையில் நின்று மட்டுமே வெளியுறவுக் கொள்கையை வகுக்கவும், கடைபிடிக்கவும் முடியும். காணப்படும் உயிருள்ள யதார்த்தத்தைப் பற்றிய சரியான அறிவும்.
நடைமுறைக்குப் பொருத்தமான கொள்கையும் இல்லாமல் எந்தவொரு அரசற்ற தேசிய இனமும் ஒருபோதும் விடுதலையடைய முடியாது. இதில் கற்பனைகளும், தூய்மை வாதங்களும், முற்கற்பிதங்களும் பார்வைக்கு வசீகரமாகவும் மனதிற்கு இனிதாகவும் இருக்கலாமே தவிர , நடைமுறையில் அவற்றால் புதை குழிகளைத் தவிர வேறொன்றையும் தர இயலாது.
ஜேர்மானியத் தத்துவஞானி ஹெகல் கூறுவது பின்வருமாறு, "கவனத்திற்குரிய விடயம் என்னவெனில் நாம் வரலாற்றிலிருந்து எதனையும் கற்பதில்லை என்பதுதான் வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம். " ("The only thing we learn from history is that we learn nothing from history". - G.H. F. Hegel) வரலாறு என்பது மனித நடத்தையை, நடைமுறையில் பரிசோதித்து அறிவதற்கான ஒரு ஆய்வுக்கூடம். அந்த வரலாற்று அறிவிலிருந்தும் சொந்த அனுபவங்களிலிருந்தும் பாடங்களையும் படிப்பினைகளையும் பெறத் தவறினால், நச்சுக்கனிகளைத் தவிர வேறு எதனையும் பெறமுடியாது.
அரசியல் பற்றியும், கொள்கை வகுப்பு மற்றும் நடைமுறை சம்பந்தமாகவும் ஜெர்மனியின் பிஸ்மாக் கூறிய பின்வரும் கூற்றும் கவனத்திற்குரியது. "Politics is the art of the possible, the attainable — the art of the next best". --- Otto Von Bismarck. " அரசியலானது சாத்தியமானதைப் பற்றியும், அடையப்படக் கூடியதைப் பற்றியதுமான ஒரு கலை; காணப்படுவனவற்றுள் அடுத்து ஆகச் சிறந்ததாக காணப்படுவது எது என்பதைக் கண்டறிந்து, அதை முன்னெடுக்கும் வித்தை." பிராணி இயல் கூறும் கவனத்துக்குரிய உண்மை என்னவெனில்: நடுத்தர அளவுக்கு மேல் வளர்ந்த ஓர் உடும்பை நரியால் வேட்டையாட முடியாது.
ஆனால், பெரிய உடும்பே ஆயினும் அது பொந்தினுட் தலையை ஒட்டிவிட்டு எதிரிக்குத் தெரியாதவாறு தன் உடம்பு முழுவதும் மறைந்து விட்டது என்று ஆறுதல் அடையும் ஓர் உடும்பை நரியால் இலகுவாக வேட்டையாடி உண்டு களிக்க முடியும். இவ்வாறு தலையைப் பொந்தினுள் ஓட்டிவிட்டு, உடம்பை எதிரிக்குக் காட்டிக் கொண்டிருக்கும் உடும்பும், கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாகக் கருதும் பூனைக் குட்டியும் போல், அரசியல் நோக்கு நிலை இருக்கக் கூடாது. காணப்படும் யதார்த்தத்தை, காலங்களை முன்னோக்கியும், பின்னோக்கியும் பார்க்க வேண்டும். அத்தகைய பார்வை உள்ளவர்களிடம் எதிர்காலம் பற்றிய துல்லியமான தீர்க்கதரிசனம் தோன்றும். அந்தத் தீர்க்க தரிசன ஒளியில்
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 01 November, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.