உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்! 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு
இலங்கை கடவுச்சீட்டின் (Passport) தரவரிசை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான Henley Passport Index தரவரிசைப்படி, உலக நாடுகளில் இலங்கை 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கை கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள், விசா இல்லாமல் அல்லது சென்ற இடத்திலேயே விசா (Visa on Arrival) பெற்றுக்கொண்டு 39 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடவுச்சீட்டு
Henley Passport Index என்பது உலக நாடுகளின் கடவுச்சீட்டு வலிமையை அளவிடும் முக்கியமான தரவரிசைகளில் ஒன்றாகும்.
இந்த தரவரிசை, முன்கூட்டியே விசா பெறாமல் எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் 199 கடவுச்சீட்டுகளை மதிப்பிடுகிறது. இந்த தரவரிசை, சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை பெற்றுள்ள சிறந்த தரவரிசை இதுவாகும்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நிலை சற்று முன்னேற்றம் கண்டுள்ளது.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இலங்கை 96ஆவது இடத்திலும், 2023 ஆம் ஆண்டு 100ஆவது இடத்திலும், 2022 ஆம் ஆண்டு 102ஆவது இடத்திலும், 2021 ஆம் ஆண்டு 107ஆவது இடத்திலும் இருந்தது. 2026 ஆம் ஆண்டின் 94ஆவது இடம், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை பெற்றுள்ள சிறந்த நிலையாகும்.
மிக உயர்ந்த தரவரிசை
2017 ஆம் ஆண்டு இலங்கை 95ஆவது இடத்தில் இருந்தது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு 99ஆவது இடத்துக்கு சரிந்த இலங்கை, 2019 ஆம் ஆண்டு 96ஆவது இடத்துக்கு முன்னேறியது.
2020 ஆம் ஆண்டு 97ஆவது இடத்திலும், 2021 ஆம் ஆண்டு 107ஆவது இடத்திலும் இருந்தது. 2021 ஆம் ஆண்டின் 107ஆவது இடத்திலிருந்து தற்போது 2026 ஆம் ஆண்டு 94ஆவது இடத்துக்கு இலங்கை முன்னேறியுள்ளது.

அதாவது கடந்த 5 ஆண்டுகளில் இலங்கை கடவுச்சீட்டின் தரம் 13 இடங்கள் உயர்ந்துள்ளது.
இலங்கையின் இந்த முன்னேற்றத்துக்கு, அதிகரித்து வரும் சர்வதேச தொடர்புகள், சுற்றுலா வளர்ச்சி, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் பல நாடுகளுடனான நல்லுறவுகள் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
இலங்கையின் இந்த முன்னேற்றம், நாட்டின் சர்வதேச தொடர்புகள் மற்றும் உலக நாடுகளுடனான நம்பிக்கை அதிகரித்து வருவதற்கான ஒரு சாதகமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.