தமிழர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்! - ஐ.நா சபைக்கு சென்ற அவசர கடிதம்
இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிர் சார்லஸ் நிர்மலநாதன் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தமிழர்களை, குறிப்பாக தமிழ் மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அந்த கடிதத்தில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“செப்டம்பர் 24ம் திகதி இரவு 11 மணியளவில் வட மாகாணத்தில் மன்னாரில் உள்ள வங்காலைபாடு என்ற இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு மீனவர்கள் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, கடற்படை அதிகாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது அந்த அந்த பகுதி கிராம சேவகர் ப்ரின்ஸ் யூட் பிரின்ஸ்டன் லெம்பர்ட் தலையிட்டு, கடற்படை அதிகாரிகளுடன் அவர்களின் அடையாளம் மற்றும் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்துள்ளார்.
இதனையடுத்து கிராம சேவகர் மீதும் சுமார் 10க்கும் மேற்பட்ட கடற்படையினர் சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான சேவகர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
"கடற்படையால் தாக்கப்பட்ட இரண்டு மீனவர்கள், பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றபோது, கடற்படை அதிகாரிகள் மீதான முறைப்பாடை பதிவு செய்ய மறுத்தது மட்டுமல்லாமல், அவர்கள் இரண்டு மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பதற்றமான சூழல் மற்றும் இப்பகுதியில் உள்ள தமிழர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து, குறிப்பாக அருகில் உள்ள கடற்படை முகாம் பற்றி அச்சத்தில் உள்ளனர்.
பொலிஸார் மீதான நடுநிலைமையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால், இந்த சம்பவம் குறித்து உங்களுக்கு அறிவிக்கின்றேன். தமிழர்களை, குறிப்பாக மீனவர்களை, கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
மன்னாரில் கிராம சேவகர் உள்ளிட்டோர் மீது கடற்படையினர் தாக்குதல்