இஸ்ரேலில் இலங்கையர்கள் மீது தாக்குதல்: தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்
இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கைப் பணியாளர்கள் மீது இரசாயனம் கலந்த நீரைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கைப் பணியாளர்கள் மூவர் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானதாக இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அறிவுறுத்தல்
அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் பரவி வந்த காணொளிகளும் தகவல்களும் குறித்து தூதரகம் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தனிமையான இடங்களில் சிறிய குழுக்களால், வெளிநாட்டு பணியாளர்கள் மீது இரசாயனம் கலந்த நீர் தெளிக்கப்பட்டு தாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியாக செல்லும் வெளிநாட்டுப் பணியாளர்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இத்தகைய தாக்குதலுக்கு இலக்காகியதாக மூன்று இலங்கையர்கள் தங்கள் அனுபவங்களை தூதரகத்துக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்களுக்குப் பின்னர், இலங்கை தூதரகம் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்திற்கும் மக்கள்தொகை மற்றும் குடியேற்ற ஆணையத்திற்கும் (PIBA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அனைத்து வெளிநாட்டு பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தூதரகம் கோரியுள்ளது.
இதேவேளை, முதல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக 13 முதல் 19 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் பிற சான்றுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
இலங்கைப் பணியாளர்கள்
இஸ்ரேலில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தாய் நாட்டுக்கு பணம் அனுப்பச் செல்லும் சந்தர்ப்பங்களில் தனியாக செல்வதனை தவிர்க்குமாறும், தங்கள் கைப்பேசிகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அவசரநிலைகளில் பொலிஸ் (100), நோயாளர் காவு வண்டி (101) எண்களையும், இலங்கை தூதரகத்தின் 24 மணி நேர அவசர எண் (+94718447305) என்பதையும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது, இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்புகள் இந்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனவெனவும், மேலதிக தாக்குதல்கள் நடைபெறாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.