தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக பல நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை
ஓக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்காக அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ஆலோசகரும் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவருமான லலித் வீரதுங்க இது தொடர்பில் தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே முதல் தடுப்பூசிக் குப்பியைப் பெற்றவர்களுக்குத் தடுப்பூசியின் இரண்டாவது அளவை வழங்கும் போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அதனைப் பூர்த்தி செய்யத் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்தியாவில் கோவிட் தொற்றுக்கள் அதிகரித்து வருவதால் அங்கு தடுப்பூசிகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. எனவே எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை இந்தியா விரைவாக வழங்குவதை எதிர்பார்ப்பது கடினம்.
எஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் குப்பிக்கும், இரண்டாவது மருந்துக்கும் இடையில், 16 வாரங்கள் வரை இடைவெளி இருக்கலாம். இருப்பினும், இப்போது அரசாங்கத்தின் முக்கிய கவனம் ரஷ்யத் தயாரிப்பான ஸ்பூட்னிக் வி தடுப்பூசி மீது உள்ளது, இதில் இலங்கை 13 மில்லியன் அளவுகளைக் கோரியுள்ளது.
இதன்படி முதல் தொகுதி அடுத்த வாரம் நாட்டிற்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது, இதேவேளை சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம் விரைவில் ஒப்புதல் அளிக்கும். இதனையடுத்து தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் இலங்கையில் அதன் பயன்பாட்டை அங்கீகரிக்க உதவும்.
இதற்கிடையில், ஃபைசர் தடுப்பூசியின் 5 மில்லியன் குப்பிகளை கொள்வனவு
குறித்தும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடப்படவில்லை, எனினும் அந்த தடுப்பூசி
எந்தவொரு விநியோகமும் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என்று வீரதுங்க மேலும்
கூறியுள்ளார்.