விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்ததற்கு காரணம் கூறும் பிள்ளையான்
நான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையும் போது எனக்கு பதினாறறை வயது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நான் பாடசாலை சென்று படிக்கும் காலப்பகுதியில் எனது கிராமம் முழுவதும், போர்சூழலை அண்டியே காணப்பட்டது. அதிலும் 90ஆம் ஆண்டு நான் பாடசாலையில் இருக்கும்போது தான் அப்பகுதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் சுற்றிவளைக்கப்பட்டன.
பொலிஸ் நிலையங்களை விடுதலைப் புலிகள் சுற்றிவளைத்தார்கள் என்று அறிவிக்கப்பட்டது. எங்களது பாடசாலை அருகில் எல்லாம் வெடிச்சத்தங்கள் கேட்டன. பாடசாலையை விட்டு வீட்டுக்கு நாங்கள் ஓடிச் சென்றோம். அதன் பின்னர் தான் நிலைமை அனைத்தும் தலைகீழாக மாறியது.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைவதற்கு காரணம்
எங்களது வகுப்பில் இருந்தும், எனது பாடசாலையில் இருந்தும் பலர் சென்று விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தனர்.
அந்த சமயம் எங்களது கிராமத்தை அண்டிய பல பகுதிகளில் ஊர்காவற் படை என்ற ஒன்று இருந்தது. அப்போது வாழைச்சேனை நகரத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சிப்பாய் ஒருவர் என்னை அழைத்தார். அது எனக்கு சரியாக கேட்கவில்லை. அதன் பின்னர் என்னை அழைத்து என் கன்னத்தில் அறைந்தார். அது வித்தியாசமான வலியைத் தோற்றுவித்தது.
ஏன் கேட்காமல் போகிறாய் என்று சிங்களத்தில் அந்த சிப்பாய் ஏதோ ஒன்றை கேட்டார். அது எனக்கு சரியான நினைவில்லை. அது எனக்கு மிக கோபத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னரே அடுத்த ஐந்தாறு நாட்களுக்குள் நான் விடுதலைப் புலிகள் அமைப்பில் சென்று இணைந்தேன்.
அதற்கு முன்னரெல்லாமல் இயக்கம், யுத்தம் என்பதில் நாட்டம் என்பது கிடையாது. எனினும் இந்த சம்பவம் நிலைமையை மாற்றிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.