டயானா கமகே விசா இன்றி நாட்டில் தங்கியுள்ளாரா: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பிரித்தானிய பிரஜையான இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சட்ட ரீதியாக விசா பெற்றுக்கொள்ளாமல் நாட்டில் தங்கியிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் பிரஜாவுரிமை தொடர்பில் சட்டத்தரணிகள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலித்த போதே பிரதம நீதவான் நந்தன அமரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
டிசம்பர் 15 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களம்
இதனிடையே, டயானா கமகே தொடர்பில் சட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், அது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாது என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.