காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனை பெருந்தோட்டத்துறையின் அழிவின் ஆரம்பமாக அமையும்: தயால் குமாரகே
"பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனையானது நடைமுறைக்கு வராது எனவும் அவ்வாறு தோட்டக் காணிகளை பங்கீட்டால் அதுவே பெருந்தோட்டத்துறையின் அழிவின் ஆரம்பமாக அமையும் என சிலோன் தோட்ட அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தயால் குமாரகே தெரிவித்துள்ளார்.
நுவரெலியா – ரதல்ல பகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக்கும் திட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பி்ல் மேலும் தெரிவித்ததாவது,
உரம் தொடர்பான பிரச்சினை
உரம் விநியோகிக்கப்படும் என ஜனாதிபதி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஆகியோர் அறிவிப்புகளை விடுத்து வந்தாலும், அதற்கான வேலைத்திட்டம் இன்னும் வகுக்கப்படவில்லை.
அது தொடர்பில் எமக்கு தெளிவுபடுத்தவும் இல்லை. இது தாமதிக்கப்படுவதன் பின்னணியில் வேறு நோக்கம்கூட இருக்கலாம் என சந்தேகிக்கின்றோம்.
தோட்டங்கள் காடாகி வருகின்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நாமும் ஏற்கின்றோம். ஏனெனில் களைக்கொல்லி மற்றும் புற்களை அழிக்கக்கூடிய மருந்துகள் இல்லை.
தோட்டங்கள் காடாவதற்கு இதுவே காரணம். தோட்டங்கள் காடாகினால் கொழுந்து பறிக்க முடியாது. தற்போது 50 வீதமான தொழிலாளர்கள், இத்தொழியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இறப்பர் தொழிலாளர்கள்
இறப்பர் தொழிலாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனையானது தோல்வி கண்ட பொறிமுறையாகும்.
பலரும் அது பற்றி கதைக்கின்றனர். ஆனால் பரீட்சாத்த நடவடிக்கைகூட தோல்வி கண்டுள்ளது.
இதனை நாம் தேர்தல் கால வாக்குறுதியாகவே கருதுகின்றோம். அதனால்தான் இன்றளவில் நடைமுறைக்கு வராமல் உள்ளது.
தொழிலாளர்களுக்கு காணிகளை பங்கிட்டு வழங்கினால் அவர்கள் தேயிலை பயிரிடமாட்டார்கள். கிழங்கு, கரட் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளையே மேற்கொள்வார்கள்.
இதனால் தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்படும். குறிப்பாக
பெருந்தோட்டத்துறையின் அழிவின் ஆரம்பமாகக்கூட இதனை பார்க்கலாம்.
பெருந்தோட்டத்துறையின் இருப்பை காக்க முடியாது என்பதே எமது மற்றும்
தொழிலாளர்களின் கருத்தாகும்." என்றார்.





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
