30 வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாத வீதி: மக்கள் விசனம் (Photos)
அக்கரப்பத்தனை - மோர்சன் தோட்டத்திற்கு செல்லும் ஆறு கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரதான வீதியானது, 30 வருடங்களாக புனரமைப்பு செய்யாத காரணத்தினால் வடிகான்களைப் போன்று காட்சியளிக்கின்றது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மழைக்காலங்களில் இப்பாதையில் பயணிக்க முடியாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் வெள்ளம் வழிந்துச் செல்லும் நீரோடை போன்று காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
500க்கும் மேற்பட்ட மக்கள், பாதையை பயன்படுத்தி வரும் நிலையில், பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் வாகன வசதிகள் இல்லாமல் நடந்து செல்வதுடன் பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வீதி புனரமைப்பு செய்யப்படாமையால், எந்தவொரு வாகனமும் இவ்வீதியில் பயணிப்பதில்லை. எனினும் மிகவும் கஸ்டத்தின் மத்தியில் முச்சக்கரவண்டி அதிக பணத்தை வசூலித்து பயணிக்கின்றன எனவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இப்பாதையின் ஊடாக சென்ற வான் ஒன்று, 60 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளானது. இதன்போது மூவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.