கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் களமிறக்கப்படவுள்ள இராணுவத்தினர்! அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் அரசாங்கம்
அதிகரித்து வரும் பாதாள உலகக்கும்பல்களின் அச்சுறுத்தல்களை அடக்கும் வகையில் இராணுவத்தினரைக் களமிறக்க அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது.
அதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் பாதாள உலகக்கும்பல்களைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் இராணுவத்தினர் களமிறக்கப்படவுள்ளனர்.
இராணுவத்தைக் களமிறக்கும் திட்டம்
துப்பாக்கிப் பிரயோகம் உள்ளிட்ட பாரிய வன்செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்களை கட்டுப்படுத்தவும், கைது செய்யவும் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இந்த விடயத்தில் வெற்றிகரமாகச் செயற்படத் தவறியதன் காரணமாகவே இராணுவத்தை களமிறக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
மேல்மாகாணத்தில் பரீட்சார்த்தமாக களமிறக்கப்படும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் தென் மாகாணம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலும் பாதாள உலகக்கும்பல்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.



