தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகளை முடக்க ரணில் திட்டம்: சட்டத்தரணி யோதிலிங்கம் பகிரங்கம் (Video)
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் பௌத்த கருத்துக்களை வெளியிட்டார் எனவும் தொல்லியல் திணைக்கள தலைவர் மீதான நடவடிக்கையை மேற்கொண்டார் எனவும் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி. அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தனது அலுவலகத்தில் இன்று(15.06.2023) நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்தாவது,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட அடுத்த நாளே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை தமிழ் அரசு கட்சி பிரதிநிதிகளைக் அழைத்து கலந்துரையாடினார்.
தொல்லியல் திணைக்களத்தினுடைய ஆக்கிரமிப்பு
அதிலும் சம்மந்தனும் தள்ளாத வயதில் கூட, இயலாத நிலையில் கூட, அந்த கலந்துரையடலில் பங்குபற்றியிருந்தார். பிரதானமாக அங்கு பேசப்பட்ட விடயம், தொல்லியல் திணைக்களத்தினுடைய ஆக்கிரமிப்பு சம்பந்தமான விடயங்கள்.
தொல்லியல் திணைக்களத்தினுடைய தலைவரும் அதில் கலந்து கொண்டிருந்தார். அதில் தமிழ் அரசியல் தலைவர்கள் இங்கே நடக்கின்ற தொல்லியல் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் விலா வாரியாக, ஒழுங்காக எடுத்துரைத்திருந்தார்கள்.
இது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தியிருந்தது.
உண்மையில் தொல்லியல் திணைக்களம் அரசாங்கத்தினுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றுகூட சொல்லிவிட முடியாது.
அரசாங்க வரவு செலவு திட்டம்
தொல்லியல் திணைக்களத்திற்கான நிதி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திலிருந்து மட்டும் போவது அல்ல. அரசாங்க வரவு செலவு திட்டத்திலிருந்து செல்லும் நிதி விகாரைகளை கட்டுவதற்க்கு போதுமானது அல்ல.
அவர்களுக்கு வெளியிலும் எங்கிருந்தோ நிதி செல்கிறது. இதனை அவர்களே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
விகாரைகள் கட்டுவதற்குரிய செலவுகள் அனைத்தையும் நாங்கள் வெளியில் இருந்து தான் பெற்றுக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.
இந்நிலையில, இவ்வாறு நிதியைப் பெற்று ஒரு திணைக்களம் செலவு செய்ய முடியாது என்று ஜனாதிபதி ரணில் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஆகவே இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறி இருந்தார்.
தமிழ் மக்கள் மத்தியில் இன அழிப்பு
இலங்கை தமிழ் அரசு கட்சி பிரதிநிதிகளைக் அழைத்து கலந்துரையாடிய மறுநாள் மகாநாயக்கர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது மட்டுமல்லாமல் அவர்கள் கடிதம் ஒன்றிணையும் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார்கள்.
அதில் வெளியில் இருந்து வருகின்ற நிதியை நீங்கள் நிறுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
தொல்லியல் திணைக்களம் அரசாங்கத்தினுடைய ஒரு கட்டுப்பாட்டிற்குள் இயகக்கும் நிறுவனம் இல்லாமல் அது தனித்து செயல்படுகின்ற ஒரு நிலைமையை காண முடிகிறது.
ஒரு விரிவான நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் தான் அவர்கள் செயல்படுகிறார்கள். அந்த விரிவான திட்டம் என்பது பௌத்த மதத்தை ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாக பயன்படுத்தி, அதனூடாக தமிழ் மக்கள் மத்தியில் ஒருவகையான இன அழிப்பை செய்து வருகிறது.
மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு
ஒரு இனத்தை அழிப்பது என்றால் மொழியை அழிப்பது, கலாசாரத்தை அழிப்பது, பொருளாதாரத்தை அழிப்பது, உட்பட்ட பல விடயங்கள் உள்ளடங்கும்.
இந்த பௌத்த விகாரைகளை கட்டுகின்ற விவகாரம் ஒரு கலாச்சார அழிப்பாகவே மேற்கொள்ளப்படுகிறது. இந்த விடயங்கள் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து, ஒரு பாரிய எதிர்ப்பு வரக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் மக்களுடைய விவகாரம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு இருக்கின்ற ஒரு சூழலில் இதற்கு பதில் வழங்க வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் காணப்படுகின்றது.
இந்த விவகாரத்தை வலுவடைய செய்தவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தான்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த விவகாரத்தை வலுவடைய செய்து சர்வதேச மட்டத்தில் கொண்டு வந்தது மற்றும் அதனை ஒரு பேசுபொருளாக கொண்டு வந்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடைய செயற்பாடுதான்.
பௌத்த ஆக்கிரமிப்பு
இதனை ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்ய வேண்டிய தேவை அதேவேளை சமரசம் செய்வதன் ஊடாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீது எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் வெளியில் பிரச்சாரம் ஆகாமல் தடுக்கவேண்டிய தேவையும், ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவர்களது மூன்று உறுப்பினர்களை விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதனுடைய நோக்கம் என்னவென்றால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வரையறை என்னவென்று புரிய வைப்பதுதான்.
அதாவது ”இதற்கு மேலே நீங்கள் செல்வீர்களேயானால் தலைவர்கள் என்று பார்க்காமல் நாங்கள் அவர்களையும் கைது செய்வோம்” என்ற செய்தியை அரசாங்கம் கூறியிருக்கிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த செயற்பாடுகளை ஏதோ ஒரு வகையில் முடக்க வேண்டும் என்றால், இங்கே பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக தான் செயற்படுகிறேன் என்பதை வெளிக்காட்ட வேண்டிய தேவையும் இருக்கிறது.” என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |