அத்தியாவசிய மருந்துகள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த 08 மாவட்டங்களில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம்
முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இப்போராட்டம் மன்னாரிலும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கிராமிய மீனவப் பெண்கள், மாதர் ஒன்றியங்கள் ,பெண்கள் வலையமைப்பினர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் அமைப்புக்கள் போன்ற அமைப்புகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கும் போது,
”இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடந்த கால கோவிட் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் இந்த நேரத்தில் தற்போது இலங்கையில் அநேக மக்களுக்குத் தேவைப்படும் மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் முழுமையாக கிடைக்கப் பெறாத நிலையில் உள்ளது.
இது மக்களின் அடிப்படை சுகாதார உரிமையினை அனுபவிக்க முடியாத நிலையை காட்டுகிறது.
மருந்துப் பொருட்களுக்கும் மருத்துவ சாதனங்களுக்கும் தட்டுப்பாடு
மேலும் சாதாரண நோய் மற்றும் சத்திர சிகிச்சைகள் போன்றவற்றிற்கான மருந்துப் பொருட்களும் மருத்துவ சாதனங்களும் தட்டுப்பாடாக உள்ளது.
நாய், பூனை மற்றும் பாம்பு தீண்டல்களுக்கு மருந்துகள் கிடைக்கப் பெறுவது கடினமாக உள்ளது.
அத்துடன் இவ்வாறான தேவைகள் கிடைக்கப் பெறாத எல்லைக் கிராமங்கள் அண்டிய பிரதேச வாழ் மக்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள் என்பதை நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கு இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மூலம் தெரிவிக்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் மன்னார் மெசிடோ பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
செய்தி: ஆஷிக்
யாழ்ப்பாணம்
அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில் போராட்டம் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்தில் “அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்கவேண்டும்”, “மருந்துகளை உடனடியாக பெற வழிவகை செய்ய வேண்டும்”, “பெண்களின் சுகாதார உரிமை உறுதிப்படுத்த வேண்டும்”, “சுகாதார உரிமை எமது உரிமை” போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
குறித்த போராட்டத்தில் மகஜரும் வாசிக்கப்பட்டது. குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டதாவது,
“இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள், பெண்கள் வலையமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகிய நாம் எமது மேற்படி கோரிக்கையை இத்தால் தங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
இலங்கையின் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள நாங்கள் கடந்த கால யுத்தம், கோவிட் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வந்தாலும் தற்போது இலங்கை வாழ் அநேகமான மக்களுக்கான தேவையான அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் முழுமையாகக் கிடைக்கப் பெறாத நிலையினையே காணுகின்றோம் இது எங்களது அடிப்படை சுகாதார உரிமையினை அனுபவிக்க முடியாத தன்மையையே காட்டி நிற்கின்றது.
மேற்படி அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் முழுமையாகக் கிடைக்கப் பெறாத பாதிப்பானது அனைத்து மக்களையும் பாதித்திருந்தாலும் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களையும் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளையும் அதிகமாக பாதிப்பிற்குள்ளாக்கியிருக்கின்றது.
இன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள மக்கள் தங்களுக்கு ஏற்படும் சாதாரண நோய் தாக்கம் தொடக்கம் பாரிய சத்திர சிகிச்சை வரையான சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு செல்லுவதே அவர்களது உரிமையாகும்.
குறிப்பாக மக்கள் வைத்தியசாலைகளுக்குச் செல்லுகின்ற போது குறிப்பிட்டளவு அத்தியாவசிய மருந்துப் பொருட்களே வைத்தியசாலைகளில் வழங்கப்படுகின்றது.
ஏனைய மருந்துப் பொருட்களை தனியார் வைத்தியசாலைகளிலோ அல்லது தனியார் மருந்தகங்களிலோ பணம் செலுத்தி பெற வேண்டிய சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
அதுமாத்திரமின்றி நாய், பூனை மற்றும் பாம்பு தீண்டல்களுக்கான மருந்துகளும் கிடைக்கப் பெறுவது குறைவாகவே காணப்படுகின்றது, குறிப்பாக சத்திர சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகள் மருத்துவ சாதனங்கள் உரிய வகையில் கிடைக்கப் பெறாத காரணத்தினால் உரிய காலத்தில் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்படுகின்றது.
குறிப்பாக இலங்கையில் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் அதிகமான பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர், இவை கவனிக்கப்படாதவிடத்து எமது பிள்ளைகளின் எதிர்காலம் ஆரோக்கியமற்றதாகவே காணப்படுவதுடன், இது எமது இலங்கை வாழ் மக்களின் நிலையான வாழ்க்கையை கேள்விக் குறியாக்கும் நிலையினையே உணர்த்தி நிற்கின்றது.
இது குறிப்பாக அரச வளங்கள் முழுமையாகக் கிடைக்கப் பெறாத அடிநிலைக் கிராமங்களைச் சேர்ந்த மக்களை அதிகமாக பாதிப்பிற்குள்ளாக்கியிருப்பதுடன் மற்றும் மத்திய வாழ்க்கை நிலையிலுள்ளவர்களையும் பாதித்திருக்கின்றது.
எனவே இலங்கை அரசாங்கம் என்ற வகையில் மேற்படி அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் முழுமையாகக் கிடைக்கப் பெறாத நிலையினால் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்ற இலங்கை வாழ் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்து வகைகளையும் மருத்துவ சாதனங்களையும் உடன் கிடைப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தித் தருமாறு வேண்டி நிற்கின்றோம்” என்றுள்ளது.
செய்தி:கஜிந்திரன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச வைத்தியசாலையின் முன் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. செங்கலடி பிரதேச வைத்தியசாலையின் முன் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
குறிப்பாக மருந்துத்தட்டுப்பாடு மற்றும் மருத்துவச்சேவை வடகிழக்கில் வாழும் மக்களையே அதிகமாக பாதிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
செங்கலடி பிரதேச வைத்தியசாலை முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக செங்கலடி சந்தி வரை சென்றுள்ளனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களது கோரிக்கை அடங்கிய மகஜரை செங்கலடி பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியகட்சகரிடம் கையளித்துள்ளனர்.
செய்தி : குமார்
திருனோணமலை
வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யுமாறு கோரி மூதூர் மற்றும் நிலாவெளி பகுதிகளில் இன்று (06) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கருத்து தெரிவிக்கையில், “வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. வழியில் உள்ள மருந்தகங்களுக்கு சென்று மருந்துகளைப் பெறுமாறு துண்டுகளை எழுதி தருகின்றார்கள்.
மருந்தங்களுக்கு சென்றாலும் அங்கு மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. அவசர நோய்களுக்கு கூட மருந்துகளை பெற முடியாத நிலை காணப்படுகிறது.
இதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகிறார்கள். இது விடயத்தில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி:பதுர்தீன் சியானா
கிளிநொச்சி
பெண்களிற்கான சுகாதார உரிமைகளை உறுதி செய்யக்கோரி வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக ஆரம்பமானது.
வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட வைத்தியசாலைக்கு செல்லும் மக்களிற்கான சுகாதார வசதிகள் குறைவு காணப்படுவது தொடர்பிலும், சில மருத்து பொருட்களை வெளியில் பெற்றுக்கொள்ள பணிப்பது தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டும், சுகாதார உரிமைகளை உறுதி செய்யக்கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.