தமிழர் பகுதியில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டு 50 ஆவது நாள் போராட்டம்! (Video)
வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் 100 நாள் செயல்முனைவின் 50வது நாள் இன்றாகும்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒழுங்குபடுத்தலுடன் கடந்த ஆவணி முதலாம் திகதி இப் போராட்டம் தொடர்ச்சியாக தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப் போராட்டத்தின் 50வது நாளாகிய இன்று (19.09.2022) வடக்கு கிழக்கு பகுதிகளில் பல பிரதேசங்களில் மக்கள் ஒன்றினைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி- இரணைமடு குளம் அமைந்துள்ள பகுதியில் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு கோரிய போராட்டம் இன்று (19.09.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
50ம் நாளான இன்று பட்டம் விட்டு தமது கவனயீர்ப்பு போராட்டத்தை மக்கள் முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் “பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடன் நிறுத்து”, “கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள்குரல்”, “இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
செய்தி:யது, எரிமலை
திருகோணமலை
திருகோணமலை கடற்கரை முன்றலில் வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு கோரிய மக்கள் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வுகளை கோரிய பதாகைகள் மற்றும் கோஷங்களை உள்ளடக்கிய வகையிலான ஐம்பது பாரியளவான பட்டங்கள் ஏற்றி இப் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100 நாட்கள் செயல்முனைவு தொடர்பில் அறிக்கை ஒன்றிணையும் இதன்போது வெளியிட்டுள்ளனர்.
அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,
“நாங்கள் தனி அரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கின்றோம்.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும். 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துகின்றது.
இலங்கையில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களாகிய நாம் ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களின் இனவாத கொள்கைகளால் பல்வேறு வழிகளிலும் அடக்கப்பட்டு வந்துள்ளோம். இது இன்றுவரை தொடர்கின்றது.
இதுவே தமிழ் பேசும் மக்கள் தமக்கான அரசியல் தீர்வு மட்டும் அதிகார பரவலாக்கும் குறித்து சிந்திக்க வேண்டிய விடயமாக வளர்ச்சியடைந்தது. குறித்த விடயத்தின் நியாயத் தன்மையை அண்டை நட்பு நாடான இந்தியாவும் சர்வதேச நாடுகளும் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளன.
இவற்றின் விளைவுகளாகவே இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் அதிகார பரவலாக்கும் சார்ந்து இந்தியா இலங்கை அரசாங்கத்துடன் செய்து கொண்ட 1987இல் இலங்கை- இந்தியா ஒப்பந்தம் மற்றும் 1999 தொடக்கம் 2008 வரையான காலப்பகுதியில் நோர்வே நாட்டின் மத்தியதுவம் மற்றும் 2022 ஆம் ஆண்டில் சமாதானம் உணர்வால் மற்றும் மேற்கட்டு மனம் சார்ந்த பங்களிப்பை செய்வதற்கு ஜப்பான் நாட்டின் அமைச்சரவை எஸ்.சி. அக்காசியை இலங்கைக்காக நியமித்தவை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
1987 இன் பின்னர் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எதுவுமே அதிகார பரவலாக்கத்தை நிராகரிக்கவில்லை. விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் அதிகார பரவலாக்கும் சார்ந்த உரையாடலை மேற்கொள்ள வேண்டிய நிலையே காணப்பட்டது.
1987 முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக அதிகார பரவலாக்கத்திற்கான 13வது திருத்தச் சட்டத்தை அரசியலமைப்பிலே கொண்டு வந்தார்.
அதைத்தொடர்ந்து 1990 ஆம் ஆண்டுகளில் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா அரசியல் தீர்வுக்கான திட்டங்களை முன் வைத்தார்.
இதன் போது தம்பலகாமம், மூதூர், குச்சவெளி, கிண்ணியா போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமக்கான உரிமைகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததுடன் சிறந்த தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் இதன்போது கேட்டுக் கொண்டனர்.” என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி:பதுர்தீன் சியானா
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கோரி பட்டங்கள் பறக்கவிட்டு 50 ஆவது நாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு- கல்லடி கடற்கரையில் இன்று (19.09.2022)இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கல்லடி கடற்கரையில் ஒழுங்கு செய்யப்பட்ட இப் போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பல கோரிக்கைகள் அடங்கிய வாசகங்கள் கொண்ட பட்டங்கள் தயார்படுத்தப்பட்டு அதனை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி: பவன், குமார்
மன்னார்
வடக்கு கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் 50 வது நாளை முன்னிட்டு இன்று (19.09.2022) காலை 11 மணியளவில் மன்னார் கீரி கடற்கரை பகுதியில் கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி பட்டம் ஏற்றப்பட்டது.
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் வடக்கு - கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 50 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் கீரி கடற்கரை பகுதியில் காலை இடம்பெற்றது.
சிறுவர்கள், ,மக்கள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு
நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மேலும் பறக்கவிடப்பட்ட பட்டங்களில் “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்”, “நடமாடுவது எங்கள் உரிமை”,“பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை”, “ஒன்று கூடுவது எங்கள் உரிமை” உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்டு பறக்கவிடப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ்.திலீபன் குறித்த கிராம மட்ட அமைப்புகள் ,விவசாய, கடற்றொழிலாளர் சங்கங்கள்,பெண்கள் அமைப்புகள் சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.
குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி:ஆஷிக்