நாடு அவசரகால நிலையொன்றுக்கு தயார்படுத்தப்படல் வேண்டும்! மரிக்கார் எம்.பி.வலியுறுத்தல்
எந்தவொரு அவசர காலநிலையொன்றையும் எதிர்கொள்ளும் வகையில் நாடு தயார்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ''மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருப்பதன் காரணமாக சர்வதேச ரீதியாக பாரிய நெருக்கடிகள் உருவாகும் நிலை தோன்றியுள்ளது.
எரிபொருள் விலை தாறுமாறாக அதிகரிப்பதுடன், பாரியளவில் எரிபொருள் தட்டுப்பாடும் உருவாகலாம்.
அதேபோன்று மத்திய கிழக்கில் பணியாற்றும் இலங்கையர்களின் தொழில்வாய்ப்பு, அதன் காரணமாக கிடைக்கப் பெற்று வரும் அந்நியச் செலாவணி விடயங்களிலும் பாதிப்பு ஏற்படலாம்.
இவ்வாறான அவசரகால நிலைமைகளை எதிர்கொள்ளத் தக்க வகையில் நாடு தயார்படுத்தப்பட வேண்டும். ஆனால் அவ்வாறான ஒரு தயார்படுத்தலை இதுவரை காணக்கிடைக்கவில்லை.'' என்று அவர் தெரிவித்துள்ளார்.