அரசியல் பேரியக்கத்தை கட்டியெழுப்புவதே முக்கிய பணி..!
அரசியல் பேரியக்கத்தை கட்டியெழுப்புவதே முக்கிய பணி என அரசியல் ஆய்வாளரும் சட்ட தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி. அ. யோதிலிங்கம் இவ்வாரம் வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு காட்டுறையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சியினால் கடந்த 2ம் திகதி தமிழ் அரசியல் கட்சிகளுடன் சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது.
பலத்த வாதப்பிரதிவாதங்கள்
தமிழ்த் தேசியக் கட்சிகளின் மூன்று அணிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியப் பேரவை, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன இதில் பங்கு பற்றின.
மூடிய அறைக்குள் இடம் பெற்ற சந்திப்பில் பலத்த வாதப்பிரதிவாதங்களின் பின்னர் நான்கு தீர்மானங்கள் ஒருமித்து எடுக்கப்பட்டன.

தமிழ் மக்களின் இறைமை, சுயநிர்ணயம் அடிப்படையில் சமஸ்டி முறையிலான அரசியலமைப்பு ஒன்றிற்கான சமூக ஒப்பந்தம் ஒன்றை தமிழ் - சிங்கள மக்களுக்கிடையே மேற்கொள்வதற்கான வரைபை தயாரித்தல், அரசியலமைப்பினுள் உள்ளடக்கப்பட வேண்டிய சமஸ்டிக்கான அடிப்படை அம்சங்களினை உள்ளடக்கிய விரிவான அரசியலமைப்பு வரைபு ஒன்றைத் தயாரித்தல், அரசியலமைப்பு சம்பந்தமான விவாகரத்தில் தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைந்து செயற்படுதல்,
அதே வேளை இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் எந்த ஒரு கலந்துரையாடலிலும் தனித்தும், கட்சி அடிப்படையிலும் செயற்படாதிருத்தல், தமிழ்ச்சட்டத்தரணிகள் பேரவைக்கும் தமிழ்அரசியல் கட்சிகளுக்குமிடையிலான செயற்பாடுகள் பல கட்டங்கள் ஊடாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுதல் என்பனவே இந்த நான்கு தீர்மானங்களுமாகும் தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்மானங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட சகல தரப்புக்களும் பொறுப்புடன் செயல்படுவது மிகவும் அவசியமாகும்.
தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை இது தொடர்பாக பொறிமுறைகளை உருவாக்கி செயற்படுவது ஆரோக்கியமாக இருக்கும். தமிழக்; கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைவுத்தன்மை இல்லாதனால் மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தி ஏற்பட்டிருந்தது. தற்போதைய தீர்மானங்கள் மக்களுக்கு ஆறுதலைக் கொடுப்பனவாக உள்ளன.
தாயகத்தில் தேசிய மக்கள் சக்தி சகலவழிகளினாலும் ஊடுருவி வருகின்ற நிலைமையில் இந்த ஒருங்கிணைவு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
இது விடயத்தில் தமிழ்ச்சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சி பாராட்டப்பட வேண்டியதாகும். இங்கு இரண்டு செயற்திட்டங்கள் அவசியமாக உள்ளன.
தமிழ் மக்கள் பேரவை
ஒன்று அரசியல் தீர்வு தொடர்பான சம்பந்தப்பட்ட வரைபுகளை புலமை ரீதியிலும், தர்க்கரீதியாகவும் வரைதல்.
இரண்டாவது இந்த வரைவுகள் தாயக மட்டத்திலும், இலங்கை மட்டத்திலும் பிராந்திய, சர்வதேச மட்டத்திலும் பேசு பொருளாக்கல் மூன்றாம் தரப்பின் தலையீடு இல்லாமல் அரசியல் தீர்வு சாத்தியமில்லை என்பதால் பிராந்திய சர்வதேச மட்டத்தில் பேசு பொருளாக்கல் மிக அவசியமானதாகும். தவிர இதனை முன்கொண்டு செல்வதால் பல சவால்களும் எழலாம்.

அந்த சவால்களை வெற்றி கொள்வதற்கான மார்க்கங்களையும் கண்டாக வேண்டும். வரைபுகளை வரைதல் ஒன்றும் கடினமாக இருக்கப் போவதில்லை. ஏற்கனவே வரையப்பட்ட பல வரைபுகள் உள்ளன.
தமிழ் மக்கள் பேரவையின் வரைபு மிகுந்த கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சமூக ஒப்பந்தம், சமஷ்டிப் பண்புகள் என்பன அதில் உள்ளடக்கியுள்ளன. இதைவிட வடமாகாண சபையினால் முன்வைக்கப்பட்ட வரைபும் உள்ளது அதில் சமூக ஒப்பந்தம் பற்றிக் கூறப்படாவிட்டாலும் சமஸ்டிப் பண்புகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளன.
எனவே இந்த இரண்டு யோசனைகளையும் வரைபு உருவாக்கத்திற்கு மூலாதாரமாகக் கொள்ளலாம். தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனையில் கூட்டு அதிகாரம் பற்றி தெளிவாகக் கூறப்படவில்லை.
சமஸ்டி என்பதே கூட்டும் சுயாட்சியும் இணைந்ததே ஆகும். இரண்டிற்குமிடையே வலுவான சமநிலை இருக்க வேண்டும். கூட்டு அதிகாரம் வலுவாக இருந்து சுயாட்சி அதிகாரம் வலுவாக இருக்கவில்லையெனில் அதனால் பெரிய பயன் கிடைக்காது. அதேபோல சுயாட்சி அதிகாரம் வலவாக இருந்து கூட்டு அதிகாரம் வலுவாக இல்லையெனில் அதுவும் பெரிய பயன்களைத் தராது.
அதிகாரப் பகிர்வு
சுயாட்சி அதிகாரம் சுயமாகச் செயற்பட வேண்டுமாயின் கூட்டு அதிகாரத்தின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமானதாகும். சிறீலங்காவைப் பொறுத்த வரை கூட்டு அதிகாரத்தில் தேசிய இனமாக பங்கு பற்றுவதற்கான பொறிமுறை மிகவும் அவசியமானதாகும்.
இந்தப் பொறிமுறை இல்லாவிட்டால் மத்திய அரசு என்பது சிங்கள பௌத்த அரசாகவே இருக்கும். மத்திய அரசினை சிங்கள பௌத்த அரசாக வைத்துக்கொண்டு எந்த அதிகாரப் பகிர்வு வழங்கினாலும் அது ஒருபோதும் நடைமுறைக்கு வரப்போவதில்லை.
அதிகாரப் பகிர்வு மட்டுமல்ல சாதாரண உரிமைகள் கூட நடைமுறைக்கு வரப்போவதில்லை. இது பற்றி நிறையவே அனுபவம் சோல்பரி யாப்பின் 29 ஆவது பிரிவிலிருந்து தமிழ் மொழி அரச கரும மொழியினூடாக 13வது திருத்தம் வரை உண்டு.

சோல்பரி யாப்பின் 29 ஆவது பிரிவு தமிழ் மொழி அரசகரும மொழி என்பன ஒரு இனத்திற்கேயுரிய சாதாரண அடையாள உரிமைகளாகும். அந்த சிறிய உரிமைகளைக் கூட அரசு சிங்கள - பௌத்த அரசாக இருந்தமையினால் அனுபவிக்க முடியவில்லை.
13-வது திருத்தத்தின் நடைமுறை அனைவரும் அறிந்ததே. அரசியல் யாப்பிலுள்ள பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் என்பவற்றை வழங்க சிங்கள பௌத்த அரசு தயாராக இருக்கவில்லை. இதற்கெல்லாம் மையமான காரணம் அரசு சிங்கள பௌத்த அரசாக இருப்பதே! கூட்டு அதிகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக சுவிஸ்லாந்து சமஸ்டி, பொஸ்னிய சமஷ்டி என்பவற்றில் வலிமையான ஏற்பாடுகள் உள்ளன.
பொஸ்னிய சமஷ்டி ஆகப்பிந்திய சமஸ்டி என்பதால் அதிலிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறையவே ஏற்பாடுகள் உண்டு. சமஸ்டி அரசியல் தீர்விற்கு யாப்பு வடிவம் கொடுக்கும் போது தாயக ஒருமைப்பாடு, சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள், கூட்டு அதிகாரத்தில் தேசிய இனமாகப் பங்கு பற்றல், சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவற்றில் கவனம் செலுத்துவது அவசியம். இதில் பலத்த சவாலுக்கு உள்ளாகப் போவது தாயாக ஒருமைப்பாடுதான்.
முஸ்லிம் மக்களின் வகி பங்கு தொடர்பாகத்தான் அதிகம் சவால்கள் ஏற்படலாம். முஸ்லிம் மக்களில் பலத்த மாற்றங்கள் தற்போது ஏற்பட்டுள்ளதால் ஒரு வலுவான உரையாடலை அவர்களுடன் ஆரம்பிக்கலாம்.
முஸ்லிம் மக்களின் பங்கு
ஆட்சியில் முஸ்லிம் மக்களின் பங்கு தற்போது இல்லை அண்மைக்காலத்தில் சாத்தியங்களும் இல்லை. இதில் கோட்பாட்டு; ரீதியாக சில முடிவுகளுக்கு வருவது அவசியம.; இரண்டு கோட்பாட்டு முடிவுகள் அவசியமானது.
ஒன்று வடக்கு - கிழக்கு என்பது தமிழ் மக்களினதும், முஸ்லிம் மக்களினதும் தாயகம். இரண்டாவது இரண்டு சமூகங்களும் ஏதோ ஒரு வகையில் ஐக்கியப்படாமல் வடக்கு - கிழக்கில் இருதரப்பினரது உரிமைகளையும் நிலைநாட்ட முடியாது. எனவே இரு சமூகங்களும் மனந்திறந்த கலந்துரையாடலை நடாத்தி இருதரப்பும் ஒரு சமூக ஒப்பந்தத்திற்கு போகலாமா? என்பது பற்றி யோசிப்பது ஆரோக்கியமானதாக இருக்கும்.

தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையே சமூக ஒப்பந்தம் தேவை என முஸ்லிம் புத்திஜீவிகளினால் முன்னரும் சுட்டிக்காட்டப்பட்டது. நீண்ட பகைமை காரணமாக இருதரப்பும் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பதே வரலாறாக உள்ளது.
முஸ்லிம் மக்களுடன் உடன்பாட்டிற்க்குச் செல்வது கடினமாக இருந்தால் வடக்கு - கிழக்கின் தமிழ்ப் பிரதேசங்களை நிலத் தொடர்ச்சியற்ற வகையில் இணைத்தல் என்ற தீர்மானத்திற்கு செல்லலாம். காலப்போக்கில் முஸ்லிம் மக்களுடன் உடன்பாடு வரும் போது இணைந்து செயற்படுவது பற்றி யோசிக்கலாம். சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள், சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பன பற்றி தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனையும், வடமாகாண சபையின் தீர்வு யோசனையும் நிறையவே கூறியுள்ளன.
இறுதித் தீர்மானம்
சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு விடயத்தில் இறுதித் தீர்மானமெடுக்கும் அதிகாரம் தமிழ் மக்களிடம் இருக்க வேண்டும். அடுத்தது அரசியல் தீர்வு யோசனைகளை பேசு பொருளாக்குவதாகும். அரசியல் தீர்வு முயற்சி நீண்ட செயன் முறையை வேண்டி நிற்கின்றது. முதலில் அதற்கான சூழலை கனியச் செய்ய வேண்டும் வலுவான பேசு பொருளாக்கல் மூலமே கனியச் செய்ய முடியும். இந்த பேசு பொருளாக்கல் நான்கு மட்டங்களில் நடைபெற வேண்டியது அவசியமானதாகும். தாயக மட்டம், இலங்கை மட்டம், பிராந்திய மட்டம், சர்வதேச மட்டம் என்பவையே அவையாகும்.
வரலாற்று அனுபவம் இது விடயத்தில் முக்கிய நிபந்தனையைத் தந்துள்ளது மூன்றாம் தரப்பின் தலையீடு என்பதே அந்த நிபந்தனையாகும். ; தேசிய இனப்பிரச்சினை என்பது சாராம்சத்தில் சர்வதேசப் பிரச்சனையாகும். அதற்கு உள்நாட்டுத் தீர்வு கிடையாது. சர்வதேசத் தீர்வு மட்டுமே உண்டு. தனித்து சிறீலங்கா அரசாங்கத்துடன் மட்டும் பேசித் தீர்வைக் கண்டு விட முடியாது.

வரலாற்றில் இது தொடர்பான முயற்சிகளின் தோல்விக்கு காரணம் தனித்து சிறீலங்கா அரசாங்கத்துடன் மட்டும் பேசியதே! சிறீலங்காவின் அரசுருவாக்கம் சிங்கள - பௌத்த கருத்து நிலைகளினால் கட்யெழுப்பப்பட்ட ஒன்றாகும். இதனால் நிர்ப்பந்தம் வந்தால் ஒழிய சிறீலங்கா அரசு அசையாது. அந்த நிர்ப்பந்தத்தை 3ம் தரப்பின் தலையீடு மூலமே உருவாக்க முடியும்.
13 ஆவது திருத்தம் கூட 3ம் தரப்பின் தலையீட்டின் மூலமே சாத்தியமானது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. பிராந்திய சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்குவதன் மூலமே 3ம் தரப்பின் தலையீட்டை சாத்தியப்படுத்த முடியும். எந்த முயற்சிக்கும் அடிப்படையானது தாயகத்தில் ஒருங்கிணைந்த குரலாகும். அந்த ஒருங்கிணைவு கட்சிகளிடத்தே மாத்திரம் வந்தால் போதாது.
மக்கள் மத்தியிலும் வர வேண்டும் எனவே தாயக மட்டத்தில் அரசியல் தீர்;வு யோசனைகளை பேசு பொருளாக்குவது முதலில் அவசியமானதாகும். துரதிஷ்டவசமாக இது பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடம் இருக்கின்றது எனக் கூறி விட முடியாது.
மக்களிடத்தே விழிப்புணர்வை ஊட்டக்கூடிய அடிப்படை கிராமிய கட்டமைப்புகளும் தமிழ்க்; கட்சிகளிடத்தே இல்லை. தமிழ்க் கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடும் குழுக்களாக இருக்கின்றனவே தவிர கட்சிகளாகக் கூட இன்னமும் வளரவில்லை.
சிவில் அமைப்புகளும் வளர்ச்சி கொண்டனவாக இல்லை. இந்நிலையில் உள்ளுராட்சிச் சபை உறுப்பினர்களுக்கு முதலில் விழிப்புணர்வூட்டி அவர்களினூடாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது பற்றி யோசிக்கலாம்.
அரசியல் தீர்விற்கான பணி
இரண்டாவது இலங்கை மட்டத்தில் பேசுபொருளாக்குவது. இங்கு சிங்கள மக்கள் மத்தியில் பேசு பொருளாக்குவது பற்றி மட்டுமல்ல மலையக மக்கள், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பேசுபொருளாக்கும் பொறிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். சிங்கள மக்கள் மத்தியில் பேசு பொருளாக்குவது மிகவும் அவசியம் இது விடயத்தில் சிங்களத் தரப்பில் ஒரு சாராரையாவது வென்றெடுக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு சார்பானவர்கள் இல்லையென்று கூறி விட முடியாது. மூன்றாவது பிராந்திய மட்டத்தில் பேசுபொருளாக்குவதாகும். இது மிகவும் முக்கியமானது. பிராந்திய வல்லரசான இந்தியாவின் ஒத்துழைப்பின்றி இந்த முயற்சியில் தமிழ்த் தரப்பு முன்னேறுவது கடினம். பிராந்திய விவகாரத்தில் ஏனைய வல்லரசுகள் இந்தியாவிற்கு பின்னாலேயே நிற்கின்றன. இந்திய அழுத்தம் என்பது உள்நாட்டு நிர்ப்பந்தம் இல்லாமல் மேலெழ வாய்ப்பில்லை.

இதனைத் தமிழ்த் தலைவர்கள் சிலரிடம் பாரதீய ஜனதாக் கட்சி தலைவர்களே கூறியுள்ளனர்.
இங்கு தான் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் மேலெழுகின்றது. அரசியல் தீர்வு யோசனைகளை முதலில் தமிழ்நாட்டில் பேசுபொருளாக்கி அதனூடாக மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பது பயன்களைத் தரக்கூடியதாக இருக்கும். தமிழ்நாட்டுக் கட்சிகள் தேசியக் கட்சிகளுடன் கூட்டணியாக செயற்படுவதால் இது விடயத்தில் வெற்றிகளைக் காண்பது கடினமாக இருக்கப் போவதில்லை.
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் இது தொடர்பாக மத்திய அரசிடம் ஏற்கனவே கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். நான்காவது சர்வதேச மட்டத்தில் பேசு பொருளாக்குவது. இங்குதான் புலம்பெயர் சக்திகளுக்கு பெரிய பணி காத்துக் கிடக்கின்றது. இது விடயத்தில் எதிர்நோக்குகின்ற சவால் புலம்பெயர் தரப்பில் ஒரு பிரிவினர் வெளியக சுயநிர்ணயத்தை வலியுறுத்துவதாகும்.
முதலில் உள்ளக சுய நிர்ணயத்தை வலியுறுத்துவோம். அது முடியாத போது வெளியக சுய நிர்ணயத்தை நீங்கள் முன்னெடுக்கலாம் என ஆலோசனை கூறுவது இங்கு பொருத்தமானதாக இருக்கும். தாயகத்தில் இருப்பவர்கள் வெளியக சுயநிர்ணயம் பற்றி பேச முடியாது.
மொத்தத்தில் அரசியல் தீர்விற்க்கான பணி என்பது பரந்ததாக உள்ளது. தனித்து அரசியல் கட்சிகளும், தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் இதனை முன்னெடுக்க முடியாது.
தமிழ் அரசியலோடு தொடர்புடைய அடிப்படை சக்திகள், சேமிப்புச் சக்திகள், நட்புச் சக்திகள், அனைத்தையும் இணைத்து உலக தழுவிய வகையில் ஒரு அரசியல் பேரியக்கமாக எழுச்சியடையும் போதே இதனை சாத்தியப்படுத்த முடியும். எனவே தமிழ் மக்களின் முக்கிய பணி உடனடியாக உலகலாவிய அரசியல் பேரியக்கத்தை கட்டியெழுப்புவதே!
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri