கோட்டா கோ கமவுக்கு உதவ குழுவை நியமித்த பிரதமர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகிச் செல்லுமாறு வலியுறுத்தி காலிமுகத் திடலில், ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தப்படும் “கோட்டா கோ கம”வுக்கு உதவுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குழு ஒன்றை நியமித்துள்ளார்.
போராட்டம் நடத்தப்படும் இடத்தை பாதுகாத்து, அதன் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு பொறுப்பாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இதற்கான உதவிகளை நகர சபையிடம் இருந்து பெற்றுக்கொடுப்பதற்காக கொழும்பு மாநகர மேயரும், பிரதேசத்திற்கு தேவையான அத்தியவசிய வசதிகளை வழங்க நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதி ஒருவரும், சுகாதார அமைச்சின் பிரதிநிதி ஒருவரும், இராணுவம் மற்றும் பொலிஸார் சார்பில் பிரதிநிதி ஒருவரும் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கோட்டா கோ கமவை நிர்வாகம் செய்ய வேண்டியது இங்குள்ள அணிகளே அன்றி அரசாங்கம் அல்ல என தெரிவித்திருந்தார்.