இலங்கை குரங்குகள் விவகாரம்! சீனாவிலிருந்து வந்த கையெழுத்தில்லா கடிதத்தால் எழுந்துள்ள சர்ச்சை
சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைக்காக இலங்கையிலிருந்து குரங்குகளை பெற முயன்ற சீன நிறுவனத்தின் விபரங்களை தருமாறு சீன தூதரகத்தை கேட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை குரங்குகளை ஏற்றுமதி செய்வது சாத்தியமா என்பது குறித்து ஆராய்வதற்காக குறிப்பிட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகளை அமைச்சர் மகிந்த அமரவீர மூன்று தடவை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று தடவைகள் சந்திப்பு
இந்த சந்திப்புகளிற்கு தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் ரொசான் பெரேரா ஏற்பாடு செய்தார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாய அமைச்சின் கீழ் உள்ள தேசிய உணவு ஊக்குவிப்பு சபைக்கு சீன நிறுவனம் கடிதம் அனுப்பியதை தொடர்ந்தே இந்த சந்திப்பு இடம்பெற்றது எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் தான் இந்த விடயத்தில் தொடர்புபடவில்லை என பேராசிரியர் ரொசான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடிதத்தில் கையெழுத்து எதுவுமில்லை
இலங்கையிலிருந்து குரங்குகளை கோரிய, சீன நிறுவனம் 2021 இல் சிறிய முதலீட்டுடன் பதியப்பட்டுள்ளதாக இலங்கையின் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சமூகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
சீன நிறுவனம் இலங்கையின் விவசாய அமைச்சிற்கு அனுப்பியுள்ள கடிதம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள இலங்கை அமைப்பு அந்த கடிதத்தில் கையெழுத்து எதுவுமில்லை எனவும் தொடர்புகொள்ள வேண்டிய நபரின் பெயர்கள் இல்லை எனவும் நிறுவனத்தின் இலச்சினை தலைகீழாக காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது சீன மொழி தெரியாத நபர் ஒருவரின் மோசடி நடவடிக்கை போன்று தோன்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சீன நிறுவனம் இன்னமும் செயற்படத்தொடங்கவில்லை என எங்களிற்கு தகவல் கிடைத்துள்ளது என இலங்கையின் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சமூகம் தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
