நாடு தற்போதைய நிலையில் முழுமை முடக்கத்துக்கு செல்வது அவசியம் என வலியுறுத்தல்
நாடு தற்போதைய நிலையில் முழுமை முடக்கத்துக்கு செல்வது அவசியமென மருத்துவ நிபுணர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
மருத்துவ நிபுணர்கள் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி லக்குமா பெர்னாண்டோ இதனை வலியுறுத்தியுள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், உரிய தீர்மானங்களை எடுப்பதற்காக சுகாதார அதிகாரிகள் அரசியல் தலைவர்களுக்கு உண்மைத் தகவல்களை வழங்குவதில் தோல்வி கண்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
கிராம சேவையாளர் பிரிவுகளை மாத்திரம் தனிமைப்படுத்துவதால் கோவிட் தொற்றை கட்டுப்படுத்த முடியாது.
எனினும் இந்த பரிந்துரையை மாத்திரமே சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளார்கள். திறந்துவிடப்பட்ட நீர்க்குழாய் ஒன்றை அடைப்பதற்கு பதிலாக திறந்து விடப்பட்ட நீரை அப்புறப்படுத்துவது தீர்வாக அமையாது.
எனவே குறைந்தது மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தை பெரும்பாலும் கூட்டங்களில் பங்கேற்கும் சுகாதார அதிகாரிகள் வெளிப்படுத்துவதில்லை.
இந்த நிலையில் அவர்கள் தகவல் வழங்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளா விட்டால் அரசியல் தலைவர்கள் எவ்வாறு தீர்மானங்களை மேற்கொள்ள முடியுமென கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டில் தற்போது சமூகத்துக்குள் பரவியுள்ளது.
எனினும் கோவிட் தொற்று சமூகத்துக்குள் பரவவில்லை என்று கூறிக்கொண்டிருப்பது நேரத்தை வீணடிக்கும் பேச்சென்றும் அவர் குறிப்பிட்டார்.
பொது மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்படுகின்ற போது அகங்காரத்தால் பயன் ஏற்பட போவதில்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி லக்குமா பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.