கடும் நெருக்கடியில் சிக்கவுள்ள இலங்கை மக்கள்.!
அரசாங்கம் எதிர்கொள்ளவுள்ள கடன் நெருக்கடியின் மொத்த சுமையும் சாதாரண மக்கள் மீதே சுமத்தப்பட உள்ளதாக வேன்கார்ட் சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜெயகொட தெரிவித்துள்ளார்.
கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மொத்த அரசாங்க செலவினமான 8980 பில்லியன் ரூபாவில் 4495 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்துதலுக்காக செலவிடப்படுகிறது.
இலக்கு சாத்தியமில்லை
இலங்கையில், அந்நியச் செலாவணி ஒரு பெரிய நெருக்கடியில் உள்ளது. நமது டொலர் கையிருப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியில் டொலர் கையிருப்பு, 6091 மில்லியனாக இருந்தது.

இந்த ஆண்டின் செப்டம்பர் 30 நிலவரப்படி, 152 மில்லியன் புதிதாக சேர்க்கப்பட்ட நிலையில், 6243 மில்லியன் டொலர் கையிருப்பு மொத்தமாக இருந்தது.
இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் 7174 மில்லியன் டொலர்கள் என்ற இலக்கை அடைய மீதமுள்ள 3 மாதங்களில் 931 மில்லியன் டொலர்களைச் சேர்க்க வேண்டும். இது சாத்தியமில்லை.
முழுச் சுமை
அத்துடன், கையிருப்பில் உள்ள 6243 மில்லியன் டொலர்களில், 1359 சீனக் கடன்களுக்காகவும் 900 இந்தியக் கடன்களுக்காகவும் 580 சர்வதேச நாணய நிதியக் கடன்களுக்காகவும் 2400 மில்லியன் இலங்கையில் உள்ள வணிக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட குறுகிய கால கடன்களுக்காகவும் செலுத்தப்படும்.

இதன் பின்னர், நிலையான மற்றும் பயன்படுத்தக்கூடிய எஞ்சிய தொகை 1014 மில்லியன் டொலர்களாகும். இறுதியில், இந்த நெருக்கடியின் முழுச் சுமையும் சாதாரண மக்கள் மீது சுமத்தப்படும்.
இந்த வரவு செலவுத் திட்ட கொள்கைக்கு நாடாளுமன்றத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. அந்த எதிர்ப்பை வெளியே உருவாக்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |