நுவரெலியாவில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம்: பொதுமக்கள் விசனம்
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினை தொடர்ந்து பல்வேறு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நுவரெலியா மாவட்டதின் பல்வேறு பகுதிகள், டெங்கு நோய் பரவும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவான தோட்டத்தில் உள்ள தொழிலாளர் தொடர் குடியிருப்பு பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படுவதாக பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
டெங்கு நோய் பரவல்
இந்நிலையில் பொகவந்தலாவ பொகவான தொழிலாளர் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள கால் வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக பல இடங்களில் கழிவு நீர் தேங்கியுள்ள நிலை காணப்படுகிறது.
குறித்த பகுதியில் டெங்கு நோய் பரவினால் இப்பகுதியில் வாழும் சுமார் பலநூறு குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் பெரியவர்கள் உட்பட பலர் பாதிப்புக்குள்ளாகலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் தோட்ட நிர்வாகம் தொழிலாளர் குடியிருப்புக்களை பராமரித்து வந்ததாகவும் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மக்களின் கவலை
மேலும், சுகாதார பிரிவினர் மற்றும் தோட்ட நலன்புரி உத்தியோகஸ்த்தர்கள் இது குறித்து பாராமுகமாக இருந்து விடுவதாக குடியிருப்பு வாழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனினும் டெங்கு நுளம்பு பரவுவதனால் குடியிருப்பு பிரதேசம் மற்றுமன்றி பலரும் பாதிக்கக்கூடிய நிலை காணப்படுவதனால் சுகாதார துறையினர் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என தோட்ட மக்கள் பிரதேச சுகாதார துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
