சர்வதேச சமூகத்தைத் தவறான பாதையில் வழிநடத்துகின்றது ரணில் அரசாங்கம்: சுரேஷ் க.பிரேமச்சந்திரன் (VIDEO)

Ali Sabry Ranil Wickremesinghe Suresh Premachandran Sri Lanka Government
By Rakesh Sep 16, 2022 05:03 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் சர்வதேச சமூகத்தைத் தவறான பாதையில் வழிநடத்துகின்றனர் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் அமெரிக்காவின் யுஎஸ்எய்ட் அமைப்பின் நிர்வாக இயக்குநர் சமந்தா பவர் கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

அதேபோல் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்துகொண்டு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.


அவர்களது கூற்றுகளுக்குப் பதில் அளிக்கும் விதத்திலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, 

"கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஜெனிவாவில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் சர்வதேச சமூகத்தைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் பொய்யானதும் பிழையானதுமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் சமந்தா பவர் கொழும்பு வந்திருந்த நேரத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்வதற்குப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்குத் துரித தீர்வு காணப்படும் என்றும், விடுவிக்கப்படக்கூடிய காணிகள் குறித்து ஆராயப்படுகின்றது என்றும், வடக்கு மாகாணம் பெரும் பொருளாதார மையமாக மாற்றப்படும் என்றும், ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு சர்வதேசப் பொலிஸாரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என்றும் நீண்ட உத்தரவாதங்களை அளித்திருக்கின்றார்.

சர்வதேச சமூகத்தைத் தவறான பாதையில் வழிநடத்துகின்றது ரணில் அரசாங்கம்: சுரேஷ் க.பிரேமச்சந்திரன் (VIDEO) | Sri Lanka Government Ranil Wickremesinghe

ஜனாதிபதி நேர்மையாகத்தான் இந்த விடயங்களைக் குறிப்பிட்டிருக்கிறாரா என்பது முதலாவது கேள்வியாக இருக்கின்றது.

அரசியல் கைதிகள்

யுத்தம் முடிந்து பதின்மூன்று வருடங்கள் கடந்துவிட்டன அரசியல் கைதிகளில் சிலர் சிறைச்சாலைகளிலேயே இறந்துபோயிருக்கின்றார்கள்.

பல்வேறு தடவைகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டங்களில் அரசியல் கைதிகள் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

பல அரசாங்கங்களிலும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ரணில் அரசாங்கத்திலும் வழங்கப்பட்டது.

2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரையில் அவர் பிரதமராக இருந்தபோது அரசியல் கைதிகளை விடுவிக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

விடுவிக்கப்பட்ட ஒருசிலர் கூட சட்டத்தின்படி பிணையில் விடுவிக்கப்பட்டார்களே தவிர பிரதமரினதோ, ஜனாதிபதியினதோ முயற்சியின் பேரில் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

யுத்தம் முடிந்து பதின்மூன்று வருடங்களின் பின்னர் இன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு ஒருபொறிமுறை உருவாக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.

சர்வதேச சமூகத்தைத் திசைதிருப்ப முயற்சி 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும்படி பல்வேறு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய இந்தச் சமயத்தில் சர்வதேச சமூகத்தைத் திசைதிருப்புவதற்கே இத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

இதனை அடியொற்றியே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் ஜெனிவாவில் நாங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்ற இருக்கின்றோம் என்று பொய்யான தகவலைக் கூறியிருக்கின்றார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் பெற்றோர்களும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கோரி 2000 நாட்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டக் களத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர் இறந்தும் போய்விட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யாரும் சிறைகளில் இல்லை என்று ரணில் விக்ரமசிங்க எகத்தாளமாகப் பதிலளித்தாரே தவிர, இந்தக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணையோ அல்லது அதுதொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவுமே இவரால் மேற்கொள்ளப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

காணாமல் போனோர்  

சரணடைந்தவர்கள், கைதுசெய்யப்பட்டவர்கள் என்ற வகையில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கிறார்கள் என விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் கூறுகின்றன.

ஆனால், அவை ஏன்?, எப்படி நடந்தது? என்பவற்றை விசாரித்தால் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அஞ்சி அல்லது அது யுத்தக் குற்றங்களுக்குள் உள்வாங்கப்படும் என்று அஞ்சி இதனை இவர்கள் யாருமே கண்டுகொள்ளவில்லை.

ஆனால், தமது உறவுகளை இழந்த உற்றார், உறவினர்கள் இன்னமும் போராடிக்கொண்டிருக்கின்றனர். ரணிலோ காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் துரித தீர்வு காணப்படும் என்று கூறுகின்றார்.

கபளீகரம் செய்யப்படும் காணிகள் 

சர்வதேச சமூகத்தைத் தவறான பாதையில் வழிநடத்துகின்றது ரணில் அரசாங்கம்: சுரேஷ் க.பிரேமச்சந்திரன் (VIDEO) | Sri Lanka Government Ranil Wickremesinghe

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணிகளைக் கபளீகரம் செய்யும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இராணுவம், கடற்படை போன்ற படையினர் தொடர்ந்தும் தனிநபர்களுக்குச் சொந்தமான காணிகளை கபளீகரம் செய்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் - பளை பிரதேசத்தில் இராணுவத்தினர் பண்ணை அமைப்பதற்கென 1400 ஏக்கர் காணி கோரப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என்பவை தமிழ் மக்களின் வரலாற்றுப்பூர்வமான வாழ்விடம் என்பதை ஏற்றுக்கொண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் இந்தியாவின் ராஜீவ் காந்தியும் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக்கொண்டனர்.

இப்போது வடக்குக்கும் கிழக்குக்கும் இடையிலான நிலத்தொடர்பை நிரந்தரமாக இல்லாமல் செய்வதற்காகக் குச்சவெளி பிரதேச செயலகப் பகுதியிலிருந்து 27 சதுர கிலோமீற்றரைக் கொண்ட ஏழாயிரம் ஏக்கர் காணியை தென்னமரவாடி தமிழ் மக்களிடமிருந்து பறிமுதல் செய்து அதனைப் பதவிசிறிபுர என்ற சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைத்து அந்தப் பிரதேச செயலகத்தை அநுராதபுரத்துடன் இணைப்பதன் மூலம் முல்லைத்தீவுக்கும் குச்சவெளிக்கும் இடைப்பட்ட ஒரு பிரதேசமானது அநுராதபுரத்துக்குச் சேர்மதியாகின்ற ஒரு சூழ்நிலை ஏற்படுத்தப்படுகின்றது.

இதனைப் போலவே ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்த திருக்கோணேஸ்வரர் கோயிலின் புனிதத்தைக் கலைக்கக்கூடிய விதத்தில் நிரந்தரமான சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி அந்தப் பிரதேசம் சிங்கள பௌத்த மக்களுக்குச் சொந்தமானது என்பதை ஸ்தாபிக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு முன்னர் ஒரு பௌத்த கோயில், வவுனியாவில் பழமை வாய்ந்த வெடுக்குநாரி சிவன் கோயில் பிரதேசத்தில் பலாத்காரமான பௌத்த கோயில் நிர்மாணம், அதனைப் போலவே முல்லைத்தீவில் குருந்தூர்மலையில் நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி சட்டவிரோதமான முறையில் பௌத்தகோயில் நிர்மாணம் போன்ற விடயங்கள் இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிலைமை இவ்வாறிருக்க, மேலும் விடுவிக்கக்கூடிய காணிகள் குறித்து ஆராயப்படும் என்று சொல்வது சர்வதேச சமூகத்தின் கண்களில் மண்ணைத்தூவுவதைத் தவிர வேறென்ன? இவை எல்லாவற்றுக்கும் மேலாக வடக்கு மாகாணத்தைப் பெரும் பொருளாதார வர்த்தக மையமாக மாற்றுவோம் என்று கூறுவதானது நகைச்சுவையின் உச்சக்கட்டம்.

யுத்தம் நடந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 90 ஆயிரம் பெண்கள் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்கள் வாழ்கின்றன.

நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோ அல்லது வேறுவிதமாகவோ நடமாட முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றனர்.

இவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எந்தவிதமான பிரத்தியேகப் பொறிமுறைகளோ, பிரத்தியேகமான வேலைத்திட்டங்களோ ரணிலின் நல்லாட்சி காலப்பகுதியிலும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்தகைய ஒரு சிந்தனைகூட அவருக்கு இருக்கவில்லை. இன்னும் கூறுவதாக இருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இன்னமும் பின்தங்கிய பிரதேசங்களாகவே உள்ளன.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த நல்லாட்சி காலத்தில் வடக்கு, கிழக்குக்கான பொருளாதார வர்த்தக மையம் ஒன்றை வவுனியாவில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது. இதனை நிறுவுவதற்கு ஓமந்தையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த இருபத்திரண்டரை ஏக்கர் காணியைப் பயன்படுத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், வடக்கில் அத்தகைய ஒரு மையம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே அத்திட்டத்தை அரசியலாக்கி இன்றுவரை அத்தகைய திட்டம் நடைமுறைப்படுத்தப்படாததுடன் அதற்காக ஒதுக்கப்பட்ட 20 கோடி ரூபா நிதியில் ஒதுக்குப்புறத்தில் மதகுவச்சகுளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டடம் யாருக்கும் பயனின்றி இருக்கின்றது.

இதுமாத்திரமல்லாமல் பலத்த போராட்டத்தின் பின்னர், பலாலி விமான நிலையம் ஒரு சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது.

கோவிட்டை காரணம் காட்டி மூடப்பட்ட இவ்விமான நிலையம் இன்று வரை மீளவும் திறக்கப்படவில்லை. பலாலி விமான நிலையம் திறக்கப்பட்டால் வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை செழிப்படையும், புதிய உணவு விடுதிகளும் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்பதையெல்லாம் தெரிந்தும்கூட, பலாலி விமான நிலையத்தைத் திறப்பதை அரச தரப்பினர் பின்னடித்துக்கொண்டே வருகின்றார்கள்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் வருவதற்கு ஏழெட்டு மணிநேரம் செலவிட வேண்டியுள்ளது மட்டுமல்லாமல், எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் இன்றைய காலகட்டத்தில் விமான நிலையத்துக்குப் போய்வர ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக போக்குவரத்துக்காகச் செலவு செய்ய வேண்டியும் உள்ளது.

பலாலி விமான நிலையம்

இத்தகைய நிலையில் பலாலி விமான நிலையம் இயங்குமாக இருந்தால் புலம்பெயர் தமிழ் மக்களின் வருகை அதிகரிக்கும் என்பதுடன், தென்னிந்திய மக்களின் போக்குவரத்தும் அதிகரிக்கும்.

இதன்மூலம் பெருமளவிலான அந்நியச்செலாவணியையும் இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடியும்.

எந்தப் பிரயோசனமுமற்ற அம்பாந்தோட்டை மத்தளை விமான நிலையத்துக்குப் பெருமளவு நிதியை வாரியிறைக்கும் இந்த அரசு வருமானம் வரக்கூடிய - பயன் தரக்கூடிய பலாலி விமானநிலையத்தைத் திறக்கமாட்டோம் என்று அடம்பிடிப்பதுதான் வடக்கைப் பொருளாதார மையமாக மாற்றுவேன் என்னும் ரணிலின் கருத்தின் உட்பொருளா? ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பு நாடுகளை ஏமாற்றுவதற்கும் கொழும்பு வந்து செல்லும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கும் வாய்க்கு வந்தவற்றை அள்ளித்தெளிக்காமல் மேற்கண்ட விடயங்களுக்கு இனியாவது காத்திரமான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்"  என்றுள்ளது. 

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US