ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் தொடர்பில் பிரதமர் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
சம்பளமில்லாமல் விடுமுறையில் உள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் சட்ட ஆலோசனை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 03 ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வ தீர்மானத்தை அறிவிக்கும் எனவும், இதனை தொடர்ந்து சட்ட ஆலோசனை பெறப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும்,ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்ற போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நிச்சமயற்ற தன்மையில் காணப்படும் பின்னணியில் இவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் உள்நாட்டலுவல்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சரும்,பிரதமருமான தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் வரை சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் சேவையில் ஈடுபட முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 7100 இற்கும் அதிகமானோர் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.