வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற இலங்கையின் முக்கியஸ்தர்களுக்கு சிக்கல்! தொடரப்போகும் கைதுகள்
எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் கைது நடவடிக்கை தொடரும். நாட்டில் உள்ளவர்கள் மாத்திரமின்றி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற முக்கியஸ்தர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கைதுகள் தொடரும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் சில பிரபலமானவர்கள் கைது செய்யப்படுவது அவர்களது முகத்தையும் பின்புலத்தையும் பார்த்து அல்ல. முறையாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் ஊடாகவே இந்த கைதுகள் இடம்பெறுகின்றன.
எனவே எதிர்க்கட்சிகள் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தாலும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது இடை நிறுத்தப்பட மாட்டாது.
மத்துகமவில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தன் காரணமாகவே ஜகத் விதானகேயின் மகன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றனர். அவர் மீதான விசாரணைகள் கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டன.
அநுர அரசாங்கத்தின் மீதான விமர்சனம்
அந்த விசாரணைகளுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற மற்றும் பொலிஸ் விசாரணைகளில் எந்த வகையிலும் அரசியல் தலையீடு இல்லை.
தற்போது மீண்டும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பேசத் தொடங்கியுள்ளனர். அரசாங்கத்தின் மீது எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். நாட்டிலுள்ளவர்கள் மாத்திரமின்றி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களும் கைது செய்யப்படுவர்.
இந்த செயற்பாடுகளுடன் கடந்த கால அரசியல், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளது. அரச பொறிமுறையின் சில கட்டமைப்புக்களும் இவற்றில் தொடர்புபட்டுள்ளன.
அதற்கமைய பொலிஸ், புலனாய்வு பிரிவு, நீதித்துறையை சார்ந்தவர்களும் கைது செய்யப்படலாம். எனவே இது சாதாரண விடயமல்ல. இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது எதிர்க்கட்சிகள் அதிலும் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.



