ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரின் வேலைகள் ஆபத்தில்! எதிர்க்கட்சி தலைவரின் எச்சரிக்கை
அமெரிக்காவின் வரி விதிப்பால் நமது நாட்டில் ஆடை தொழில் துறையில்,ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரின் வேலைகள் ஆபத்தில் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதிக வரி
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''இலங்கை நாட்டின் ஏற்றுமதி துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் இன்று கலக்கமடைந்து போயுள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தை சந்தித்தபோது, அவர்களும் இதனால் வருத்தமடைந்துள்ளனர் என்பது தெளிவாக தெரிந்தது.
ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் இந்த வரிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். இந்த வரி விதிப்பு குறித்து உலக நாடுகள் அமெரிக்காவோடு பேசி வருகின்றன. நமது நாடு இதுவரையில் எந்த நடவடிக்கையையும் எடுத்த பாடில்லை.
ஜனாதிபதி தேர்தலில் சாதனைகளை படைத்து டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். 'America First' என்பதே அவரது தேர்தல் கோஷமாக காணப்பட்டது.
அந்தக் கொள்கையின்படி, பல தசாப்தங்களாக அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டதனால், அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதித்த நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்து பதிலடியை கொடுத்துள்ளார்.
ஆலோசனை
இதன் காரணமாக நமது நாட்டின் மீதும் 44% வரி விதிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளில் 40% ஆனவை அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
350,000 நேரடி வேலைகளையும் 1 மில்லியன் மறைமுக வேலைகளையும் இது உருவாக்கித் தருகின்றன. இன்று அவர்களது தொழில்கள் ஆபத்தில் காணப்படுகின்றன.
இந்த தொழில்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் நிர்க்கதிகளுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, சர்வதேச வர்த்தகம் தொடர்பில் விசேட நிபுணத்துவ அறிவு கொண்ட ஒரு குழுவை வாஷிங்டனுக்கு அனுப்பி, அமெரிக்காவின் உயர்மட்ட தரப்புகளோடு உறவுகளை ஏற்படுத்தி, எமது நாட்டிற்கு தீர்வுகளை முன்வைப்பதே பொருத்தமானது.
இந்த விடயத்தை தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பல முறை கூறியும் கூட அரசாங்கம் அந்த ஆலோசனைகளை புறக்கணித்து ஆணவமான பதில்களை வழங்கியது.'' என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.