எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு சிக்கல்களை சமாளிக்க வழங்கப்பட்ட சில சலுகைகளை சில வலய உயரதிகாரிகள் வழங்காது மறுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கணேசன் அனிரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச ஆசிரியர் சங்கம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆகியன
ஒன்றிணைந்து மட்டு. ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வலயக்கல்விப் பணிப்பாளர்களிடம் விடுத்த கோரிக்கைக்கமைய சில வலயங்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போன்று சலுகை வழங்கப்படுகின்றது. எனினும் சில வலய உயரதிகாரிகள் வழங்காது மறுத்து வருகின்றனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பழிவாங்கும் சில செயற்பாடுகள்
தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள் விடுகின்ற தவறுகளை சட்டம் சார்ந்து கேட்கின்ற போது, அவர்களைத் தனிப்பட்ட ரீதியாகப் பழிவாங்கும் நோக்கில் அவர்களது செயற்பாடுகள் அமைகின்றன.
அந்த வகையில்,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நாட்டின் சுபீட்சம் எனும் கருப்பொருளுக்கமைய நாடளாவிய ரீதியில் 60000 பட்டதாரிகள் ஒரு வருடப்பயிற்சியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டு, அவர்களது பிரதேசங்களிலுள்ள பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் அவர்களுடைய திட்டத்திற்கமைய பட்டதாரிகளின் விருப்பத்திற்கிணங்க, கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற பாடசாலைகளுக்கு அவர்களை நியமித்திருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் ஆசிரியர்களாக 1 வருடம் 6 மாதம் கடந்து விட்ட நிலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் மூன்றிற்குள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
கடமையாற்றும் பாடசாலைகளில் நிரந்தரப்படுத்தப்பட்டதால் அப்பாடசாலைகளில் அவர்கள் முழுமையான கடமைக்கூறுகளை நிறைவேற்றி வருகின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு
ஆனால் நாடளாவிய ரீதியில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமாகவிருந்தால் அவர்களுக்கு ஆசிரியர் என்ற வகையிலும், அதேவேளை அபிவிருத்தி உத்தியோகத்தர் என்ற வகையிலும் எதுவித சலுகையும் வழங்கப்படுவதில்லை.குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
வலயக் கல்விப்பணிப்பாளர்களிடம் விடுத்த கோரிக்கைக்கமைய சில வலயங்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போன்று சலுகை வழங்கப்படுகின்றது.
எனினும் சில வலய உயரதிகாரிகள் வழங்காது மறுக்கின்றனர்.
இது தொடர்பாக நாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளோம்.
இதற்கான தீர்வு கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் வாரத்தில் கவனயீர்ப்புப்
போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளோம் என்றார்.