இறக்கும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினராகவே இருப்பேன்-சந்திரிக்கா
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கைவிட்டு வேறு கட்சியில் இணைய போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக சுதந்திரக்கட்சியிலேயே பிறந்து வளர்ந்தேன்
முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனை கூறியுள்ளார். நான் அரசியல் ரீதியாக பிறந்த, வளர்ந்தது,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில். கட்சிக்காகவே நான் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளானேன்.
இதனால், நான் இறக்கும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினராகவே இருக்க விரும்புகிறேன். பண்டாரநாயக்கவின் கொள்கைகளை மதிக்கும் நான், அந்த கொள்கையில் அடிப்படையில் அரசியலில் ஈடுபடும் எந்த அரசியல் அணிக்கும் ஆலோசனை வழங்க தயங்க போவதில்லை.
இனப்பிரச்சினை தீர்வு வழங்கும் சந்தர்ப்பத்தில் அதற்கான ஆலோசனைகளை வழங்குவேன்
அத்துடன் தற்போது காணப்படும் இரண்டு தேசிய நெருக்கடிகளான சிறுவர் போஷாக்கின்மை மற்றும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கும் சந்தரர்ப்பத்தில் மாத்திரம் நாட்டின் பொறுப்புக்கூறும் மூத்த தலைவர் என்ற வகையில் அதற்கான ஆலோசனைகளை நான் வழங்குவேன்.
தவறான கொள்கையை பின்பற்றி வருவதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மிகவும் பலவீனமான நிலைமைக்கு சென்றுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைவர்கள் தமது சந்தர்ப்பவாதம், குறுகிய இலாபங்களுக்காக கட்சியின் கொள்கைகளை காட்டிக்கொடுக்கும் போது, உண்மையான கட்சியினர், தூய பண்டாரநாயக்க கொள்கைகளை பாதுகாக்க தற்போதும், எப்போது தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது அறிக்கையில் கூறியுள்ளார்.