மட்டக்களப்பில் போத்தல்களில் அடைக்கப்பட்ட பழவகைச்சாற்றில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற இரசாயனம்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
மட்டக்களப்பில் பிளாஸ்ரிக் போத்தல்களில் அடைத்து விற்கப்பட்டு வந்த பழவகைச்சாற்றில் அதிகளவான இரசாயன பதாத்தங்கள் கலந்துள்ளதையடுத்து அந்த உற்பத்தி கம்பனி உரிமையாளர் மற்றும் விற்பனை முகவர் ஆகிய இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று (23.11.2023) இந்த உத்தரவினை விதித்துள்ளார்.
வழக்கு விசாரணை
அரசடி பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்டுவந்த மிக்ஸ்புரூட், மாம்பழம் வகைகளை கொண்ட போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை வாங்கி குடித்த பொதுமக்கள் பலர் குறித்த பழச்சாற்றின் சுவையில் அதிகளவு கச்சல் தன்மை இருப்பதாக பொது சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
குறித்த உணவகத்தை கடந்த அக்டோபர் மாதம் முற்றுகையிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் றியல் பிளஸ் நாமம் பொறித்த 200 மில்லி லீற்றர் பழச்சாற்று போத்தல்களை கைப்பற்றி அந்த கடை உரிமையாளர், விற்பனை முகவர், உற்பத்தி கம்பனி உரிமையாளர் உட்பட 3 பேருக்கு எதிராக மட்டு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததுடன் கைப்பற்றப்பட்ட பழச்சாறு போத்தல்களின் மாதிரிகளை கொழும்பிலுள்ள இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
இதனையடுத்து மிக்ஸ்புரூட், மாம்பழம், பழச்சாற்றுக்களை இரசாயன பகுப்பாய்வினர் பரிசோதித்தன் பிரகாரம் அதில் பென்சோயிக் அமிலம், சல்ஃபர்டை, ஆக்சைடாக சல்பைட், பென்சோயிக் அமிலம் ஆகிய கலவைககளின் உள்ளடக்கம் அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளமை கண்டுபிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனித பாவனைக்கு உதந்தது அல்ல என இரசாயன பகுப்பாய்வு பிரிவினர் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை நேற்று(23) நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது வழக்கின் 2ஆம் 3ஆம் எதிரிகளான கம்பனி முகவர் கம்பனி உரிமையாளர் இருவருக்கும் தலா ஒரு இலச்சத்து 20 ஆயிரம் ரூபா வீதம் இருவரையும் 2 இலச்சத்து 40 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் குறித்த பெயர் கொண்ட பழச்சாற்று போத்தல்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் இருந்து உடனடியாக கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.



