திரிபோஷா தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை! விளக்கமளித்துள்ள நிறுவனம்
குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் ஆபத்தை ஏற்படுத்தும் அப்ளோடக்சின் இருப்பதாக கடந்த சில தினங்களாக வெளிவரும் சர்ச்சைகள் தொடர்பில் திரிபோஷ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட 10 கொள்கலன்கள் அடங்கிய சோளத்தில் அப்ளோடக்சின் அளவு அதிகமாக காணப்பட்டதால் குறித்த 10 கொள்கலன்கள் அடங்கிய சோளத்தை திரிபோஷா நிறுவனம் நிராகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட சோளத்தில் திரிபோஷா உற்பத்திக்கான சிறந்த தரம் அதில் இல்லை என திரிபோஷா நிறுவனத்தில் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பொதுவாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சோளத்தில் உள்ளே அப்ளோடக்சின் அதிகபட்ச அளவு ஒரு பில்லியனுக்கு முப்பது பாகங்கள் ஆகும்.
மேலும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா தயாரிக்கப்பயன்படும் சோளத்தில் இருக்க வேண்டிய அப்பளோடக்சின் அளவு ஒரு பில்லியனுக்கு ஒரு பங்கு என குறிப்பிடப்பட்டுள்ளது.
எட்டு மாதங்களாக திரிபோஷா உற்பத்தி செய்யப்படவில்லை
திரிபோஷா உற்பத்திக்கு தேவையான தரமான சோளம் கிடைக்காத காரணத்தினால், குழந்தைகளுக்கான திரிபோஷா எட்டு மாதங்களாக உற்பத்தி செய்யப்படவில்லை என திரிபோஷ நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையில் 74 வருடங்களாக திரிபோஷ திரிபோஷ விநியோகம் செய்து வருவதாகவும், திரிபோஷாவுக்கான இவ்வாறானதொரு நெருக்கடியை எதிர்கொள்வது இதுவே முதல் தடவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.