மதிவதனி-துவாரகா விவகாரம்! புலம்பெயர் தமிழர்களிடம் பொன்சேகா விடுத்துள்ள கோரிக்கை
விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு புலம்பெயர் தமிழர்களிடம் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவரின் மனைவி மதிவதனி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருக்கின்றனர் எனவும், அவர்களை, தான் நேரில் சந்தித்ததாகவும் வெளிநாடொன்றில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி ஒருவர் சமூகவலைத்தளங்களில் காணொளி ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். தற்போது அந்த காணொளி வைரலாகியுள்ளது.
இந்நிலையிலேயே முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சுயலாப அரசியலுக்காக பிரசாரம்
மேலும் அவர் தெரிவிக்கையில், "இறுதிப் போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும், அவரின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துவிட்டனர். இது அனைவரும் அறிந்த உண்மை.
இந்நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்று ஒரு குழுவினரும், அவருடைய மனைவி மற்றும் மகள் உயிருடன் இருக்கின்றனர் என்று இன்னொரு குழுவினரும் தமது சுயலாப அரசியலுக்காகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.
புலம்பெயர் தமிழர்களே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் நாம் விநயமாகக் கேட்டுக்கொள்வது என்னவெனில், உங்கள் சுயலாபத்திற்காக உயிரிழந்த விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |