தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையின் பின்னர் போக்குவரத்து சேவைகளை நிறுத்த வேண்டியிருக்கும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தனியார் பேருந்துகளுக்கு சேவையில் ஈடுபட போதுமான டீசல் கிடைக்காமை காரணமாக சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் தமது பேருந்துகளை போக்குவரத்து சேவையில் இருந்து அகற்றிக்கொள்ள நேரிடும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்தின தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்க சில எரிபொருள் நிலையங்களின் ஊழியர்கள் இலஞ்சம் கேட்பதாகவும், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எரிபொருள் நிலைய ஊழியர்கள் இவ்வாறு கப்பம் கோருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் நுகேகொடை எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் தன்னிடம் இருந்தும் ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற பின்னரே டீசல் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துச் சபையின் டிப்போக்கள் மூலம் தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்கப்படுவதில்லை. அவ்வாறான நிலையில் தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்க ஒழுங்கான நடைமுறையொன்று நடைமுறைபடுத்தப்படாதவிடத்து அனைத்து தனியார் பேருந்துகளையும் சேவையில் இருந்து இடைநிறுத்திக் கொள்ள நேரிடும் என்றும் அவர் தொடர்ந்தும் எச்சரித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை
தற்போதைக்கு சாதாரண தரப் பரீட்சை நடைபெறுவதன் காரணமாக சிரமங்களை சகித்துக்கொண்டிருப்பதாகவும், குறைந்த பட்சம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்குவதற்காகவேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கெமுனு விஜேரத்தின வேண்டுகோள் விடுத்துள்ளார்.