இலங்கையில் 69 வருடங்களின் பின் இன்று மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள புரட்சி
1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரிய ஹர்த்தாலுக்கு பின்னர் 69 வருடங்களின் பின் இன்று நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய ஹர்த்தால் மற்றும் வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வெளியேறுமாறு வலியுறுத்தும் நோக்கில் இந்த ஹர்த்தால் பிரச்சாரம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கு அரச, அரை அரச மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, நேற்று நள்ளிரவு முதல் ரயில்கள் மற்றும் அனைத்து தனியார் பேருந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
பல ரயில் தொழிற்சங்கங்கள் இந்த ஹர்த்தாலில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் இருந்து பொல்கஹவெல, ரம்புக்கன மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளுக்குச் செல்லவிருந்த மூன்று ரயில்கள் நேற்றிரவு இரத்துச் செய்யப்பட்டதால், பெருமளவிலான பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
அனைத்து தனியார் பேருந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் வழமையான முறையான இயங்குவதாக சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் உள்ள அனைத்து ஊழியர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவளிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்று பாடசாலை வாகன செயற்பாடுகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை அனைத்து மாவட்ட பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களை மேலும் சங்கடப்படுத்தாமல் ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.