ராஜபக்சவினரைப் போன்ற முடிவு! அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ராஜபக்சவினர் போன்று நினைத்த பிரகாரம் அநுர(Anura Kumara Dissanayaka) தரப்பு செயற்பட்டால் நாடு வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாமல் போகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க(Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அனுபவமில்லாத அரசாங்கம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்திக்கு அரசாங்கம் செய்த அனுபவம் இல்லை என்பது அவர்களின் கடந்த ஒரு மாதகால நடவடிக்கைகளில் இருந்து தெரிந்துகொள்ள முடியும்.

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இன்னும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு விமர்சன அரசியல் செய்வது போன்றே தற்போது செயற்பட்டு வருகிறது.
நாட்டை நிர்வகிக்கும் அவர்களுக்கு ஒரு முறையான வேலைத்திட்டம் இருக்க வேண்டும். நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு பயணப்பாதை இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவர்கள் அவ்வாறான எந்த வேலைத்திட்டத்தையும் நாட்டுக்கு முன்வைத்ததில்லை. அவர்களிடம் அனுபவம் இல்லாமையே இதற்கு காரணமாகும்.
எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் காரணமாக படிப்படியாக அபிவிருத்தியடைந்து வந்தது. முறையான வேலைத்திட்டம் இருந்தமையாலே அவ்வாறு செய்ய முடிந்தது.

நாட்டின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் நாங்கள் கைச்சாத்திட்டிருக்கிறோம். அதன் பிரகாரம் இன்னும் 4 வருடங்களில் மீண்டும் கடன் செலுத்த வேண்டி இருக்கிறது. அதற்கு தேவையான வேலைத்திட்டம் என்ன என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.
அரசாங்கம் ரணில் விக்ரமசிங்க கொண்டு சென்ற பொருளாதார வேலைத்திட்டத்தை அவ்வாறே முன்னெடுத்து செல்கிறதா அல்லது வேறு வேலைத்திட்டத்தை வைத்திருக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
அப்போதுதான் எமக்கும் அது தொடர்பில் ஆலாேசனைகளை தெரிவிக்க முடியும். அவ்வாறு இல்லாவிடின் ராஜபக்சவினர் போன்று நினைத்த பிரகாரம் செயற்பட்டால் நாடு வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாமல்போகும் என குறிப்பிட்டுள்ளார்.
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam