உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை நிறைவு குறித்த கூற்றுடன் உடன்பாடில்லை – கத்தோலிக்கச் சபை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை நிறைவு குறித்த கூற்றுடன் உடன்பாடில்லை என கத்தோலிக்கச் சபை அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.
இந்த கூற்றில் இணக்கப்பாடு கிடையாது என கத்தோலிக்கச் சபையின் பேச்சாளர் கலாநிதி கெபிலஸ் பெர்னாண்டோ அருட்தந்தை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணை நடாத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் அதனையே கத்தோலிக்கச் சபையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைகள் தொடர்பில் முழுமையான தகவல்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோளாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக பாரியளவு வாள்கள் தருவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை தருவித்தவர்கள் இதனை பயன்படுத்தியவர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கர்தினால் கோருவதாகவும் இது தொடர்பில் வழக்கு ஒன்றையும் அவர் தாக்கல் செய்துள்ளதாகவும் அருட்தந்தை கெமிலஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.