இலங்கை அரசாங்கம் அடக்குமுறைக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மனித உரிமைகள் குழு
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் சீர்திருத்தம் மற்றும் பொறுப்புக்கூறல் கோரும் செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதற்கும், தன்னிச்சையாக தடுத்து வைப்பதற்கும் இலங்கை அரசாங்கம் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த ஜூலை 21ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரை மிரட்டுதல், கண்காணிப்பு மற்றும் தன்னிச்சையான கைதுகள் மூலம் போராட்டங்களைக் குறைக்க பொலிஸாரும் இராணுவத்தினரும் முயன்று வருகின்றனர்.
பெரும்பான்மை வாக்குகளால் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டது |
பாதுகாப்புப் படையினர்
கடந்த ஜூலை 22ஆம் திகதி ஜனாதிபதி விக்ரமசிங்க எதிர்ப்பாளர்களைக் கலைத்து மத்திய கொழும்பில் உள்ள அவர்களின் முக்கிய இடத்தை உடைக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து பொலிஸார் கைது மற்றும் தடுப்புக்காவலில் உள்ள போராட்டத் தலைவர்களை குறிவைத்தனர்.
இந்த நிலையில் அமைதியான மாற்றுக்கருத்துக்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறையானது நாட்டின் அவசர பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண வேண்டிய அவசியத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் தவறான மற்றும் சட்டவிரோத முயற்சியாகத் தோன்றுகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் ஆழமாக வேரூன்றியிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிமைகளை மதிக்கும் ஒரு நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதில் இலங்கையின் சர்வதேச பங்காளிகள் தெளிவாக இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
படையினர் நடத்திய தாக்குதல்
கொழும்பில் உள்ள மக்கள் போராட்டம் தளத்தில் ஜூலை 22ஆம் திகதிஅதிகாலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சோதனையின் போது குறைந்தது ஒரு ஊடகவியலாளர் தாக்கப்பட்டார். இதன்போது பாதுகாப்புப் படையினரின் அதீத பலத்தைப் பயன்படுத்துவதை விமர்சித்ததற்காக வெளிநாட்டு இராஜதந்திரிகளை விக்ரமசிங்க கண்டித்ததுடன், பொறுப்பானவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பௌத்த பிக்குகள் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட கத்தோலிக்க மதகுருவான பிதா ஜீவந்த பீரிஸ் மற்றும் பலருக்கு பயணத் தடை விதித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிதா பீரிஸின் தேவாலயத்திற்குச் சென்ற பொலிசார் அவரைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம்
ஜூலை 31ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில்1,640 கத்தோலிக்க குருமார்கள் பாதிரியார்கள், கைது நடவடிக்கைகளை கண்டித்தனர். அவர்கள் அனைவரும் போராட்டங்களை ஆதரித்ததாகக் கூறியிருந்தனர். ஜூலை 26 அன்று, கொழும்பில் இருந்து புறப்படவிருந்த சர்வதேச விமானத்தில் இருந்து மற்றொரு முக்கிய எதிர்ப்பாளரான தானிஸ் அலியை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஜூலை 27ஆம் திகதி சிவில் உடையில் வந்த இனந்தெரியாத நபர்கள், முன்னாள் மாணவர் செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான வெரங்க புஷ்பிகாவை கொழும்பில் பஸ்ஸில் இருந்து கடத்திச் சென்றனர். அவர் கைது செய்யப்பட்டதை உறுதிசெய்ய பல மணிநேரம் எடுத்தது. அதுவரை அவர் இருக்கும் இடத்தை சட்டத்தரணிகள் அல்லது மனித உரிமைகள் ஆணையத்திடம் பொலிஸார் தெரிவிக்கவில்லை.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பெருந்தொகைப் பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த பின்னர் கைது செய்யப்பட்ட நான்கு எதிர்ப்பாளர்களைச் சந்திக்க சென்ற சட்டத்தரணிகளை பொலிஸார் தடுக்க முயன்றதாக மனித உரிமைப் பாதுகாவலர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை வன்முறை அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட அச்சுறுத்தல்களை தாங்கள் அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் சட்டத்தரணிகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டு பயண தடை
பொலிஸ் அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு, ஆனால் சீருடை அணியாத ஆண்கள் குழு, ஜூலை 27ஆம் திகதி அன்று எக்ஸ்போஷர் நியூஸ் என்ற இணையத்தள வெளியீட்டின் அலுவலகத்திற்குச் சென்று, புகைப்படங்களில் காட்டப்படும் நபர்களை அடையாளம் காண, சிசிடிவி காட்சிகளைக் காட்டுமாறு பாதுகாப்புக் காவலரிடம் கோரினர்.
ஜூலை 31 அன்று, ஒரு மாணவர் போராட்டக்காரர் ஒருவர், தமது பேஸ்புக்கில், தாம் பாதுகாப்புப் படையினரால் மூன்று மணி நேரம் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதாகக் கூறினார்.
'ரட்டா' என்று அழைக்கப்படும் சமூக ஊடக ஆர்வலர் ரதிது சேனாரத்னவை ஆகஸ்ட் 1ஆம் திகதி வரவழைத்த பொலிஸார் விசாரணைக்குப் பிறகு அவரைக் கைது செய்தனர். சட்டவிரோதமாக ஒன்று கூடி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக சந்தேகிக்கப்படும் சேனாரத்ன மற்றும் 11 பேருக்கு வெளிநாட்டு பயண தடையும் விதித்து கொழும்பு நீதவான் உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் 2ஆம் திகதி சமூக ஊடகங்களில் போராட்டங்கள் குறித்து பதிவிட்ட பிரிட்டிஷ் நாட்டவரான கெய்லி ஃப்ரேசரின் கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றினர். ஜூலை 9 அன்று விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக அதிகாரிகள் குறைந்தது ஏழு பேரையாவது கைது செய்தனர்.
பொலிஸார் விசாரிப்பு
போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்கியதாகக் கூறப்படும் ஒரு ஹோட்டலை பொலிஸார் விசாரித்து வருகின்றனர் சில சமயங்களில் பிடியாணை இன்றி, தலைமறைவாக உள்ள பல போராட்டக்காரர்களின் வீடுகள் அல்லது பணியிடங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள 175 இலங்கை மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் 'கடத்தல், கைது, மிரட்டல் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகள்' குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர், இது மில்லியன் கணக்கானவர்களை உணவுப் பாதுகாப்பின்மை, பாடசாலைகள்; மூடல் மற்றும் மருந்து, எரிபொருள் மற்றும் பிற தேவைகளின் பற்றாக்குறை ஆகியவற்றில் மூழ்கடித்துள்ளது.
எனவே இலங்கை அரசாங்கம் அதன் அடக்குமுறைக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு
முற்றுப்புள்ளி வைத்து, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும்,
பொதுமக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கும், பொறுப்புள்ளவர்களைக் கணக்கில்
கொண்டு சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கும் அவசரமாகச் செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.