அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் CT Scan பரிசோதனை நடவடிக்கைகள் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இன்று (04.08.2023) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாகவே இந்த கதிரியக்க மற்றும் CT Scan பரிசோதனை நடவடிக்கைகள் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் 400 கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது.
ஊழியர் பற்றாக்குறை
இதன் காரணமாக தற்போது செயலிழந்துள்ள CT, PET, MR Scan இயந்திரங்களைத் திருத்தும் பணிகளுக்கு ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் சானக்க தர்மவிக்ரம கூறியுள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஶ்ரீ சந்த்ரகுப்தவிடம் வினவியபோது,
கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களைச் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பான யோசனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அனுமதி கிடைத்தவுடன் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களை உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



