15 வயதிற்குப்பட்டவர்களுக்கு HIV தொற்று ஏற்படுவதை தடுத்த நாடாக இலங்கை
15 வயதிற்குப்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதைத் தடுத்த நாடாக இலங்கை சுகாதார நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இ.ராகுலன் தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி தினம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வருடாவருடம் டிசம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அதனுடைய நோக்கம் எயிட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வை எல்லோர் மட்டத்திலும் ஏற்படுத்துவதும், சிகிச்சை பெறுவது தொடர்பான முன்னேற்றங்களை வருடா வருடம் வெளியிடுவதும் ஆகும்.
வவுனியா மாவட்டத்தின் எயிட்ஸ் நோய்த் தடுப்பு செயற்திட்டமானது சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. உலகளாவிய ரீதியில் இது வரையில் 38 மில்லியன் எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் 1.7 மில்லியன் நோயாளர்கள் 15 வயதுக்குக் குறைந்தவர்கள். இந்த அடிப்படையில், குழந்தைக்குத் தொற்று ஏற்படுவதைத் தடுத்த ஒரு நாடாக 2019 ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
2017 இற்கு பிற்பாடு எந்த விதத்திலும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை. அதனை அடிப்படையாகக் கொண்டு அந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனை ஆராய்வதற்காகத் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக வவுனியா மாவட்டமும் காணப்படுகின்றது.
வவுனியா மாவட்டம் எயிட்ஸ் நோயைக்
கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளைக் கடுமையாக முன்னெடுத்து வருகின்றது. மக்கள்
இந்த நோய் தொடர்பான சரியான புரிதலுடன் செயற்பட வேண்டும். அதன் மூலம் இந்த நோயை
நாம் முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனத்
தெரிவித்துள்ளார்.