பாரியளவில் அதிகரித்த பெட்ரோல் - டீசலின் விலை! 15 சதவீதம் உயரும் பேருந்து கட்டணங்கள்..
இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு இன்று (22) பேருந்துக் கட்டணங்களைத் திருத்தியமைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
அதற்கான கணக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் பலமுறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருந்தபோதிலும், பேருந்துக் கட்டணங்களில் எந்தத் திருத்தமும் செய்யப்படவில்லை.
பேருந்து கட்டணத்தில் திருத்தம்
எனினும், தற்போது பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பேருந்து கட்டணத்தை குறைந்தபட்சம் 15 சதவிகிதம் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நேற்றையதினம்(21) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இது 31 சதவிகித உயர்வாகும். இதற்கமைய பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது அவசியம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை வரலாற்றில் ஒரே தடவையில் மிக அதிக சதவிகிதத்தில் எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக 90 சதவீதமான தனியார் பேருந்துகள் இன்றையதினம் சேவையில் ஈடுபடமாட்டாது என்றும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் மிக அதிக சதவீதத்தில் உயர்ந்த எரிபொருள் விலை : 90 சதவீத தனியார் பேருந்துகள் இன்று சேவையில் இல்லை