ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நடக்கப்போவது என்ன...?
ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக இலங்கை ராணுவத்தின் 20 அதிகாரிகள் 223 படையினரைக் கொண்ட ராணுவ அணி மாலிக்குப் புறப்படத் தயாராகியுள்ளது.
இந்த ராணுவ அணி மயிலிட்டியில் தொடக்கி விக்டோரியா வரை ஹேமடன் என்ற பெயரில் களப்பயிற்சி ஒத்திகையைக் கடந்த வாரம் நடத்தியுள்ளது.
மயிலிட்டியில் இருந்து கடந்த 12 ம் திகதி 6 துருப்பு காவிகள்6 யுனிபவல் கவச வாகனங்கள் உள்ளிட்ட 47 வாகனங்களுடன் புறப்பட்ட இந்த ராணுவ அணி கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மடடகலப்பு மாவட்டங்கள் வழியாக பொலநறுவை மின்னேரியா ராணுவ முகாமை கடந்த16 ஆம் திகதி சென்றடைந்தன.
ஐந்து கட்டங்களாக வழி நெடுக பயிற்சிகளை மேற்கொண்ட படி சென்ற இந்த இராணுவ அணிக்கு 15 வது ஆட்லரி படைப்பிரிவில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோம் அணி வழிகாட்டல், கண்காணிப்பு உதவிகளை வழங்கியிருக்கிறது. இராணுவத்தின் 12 ரெஜிமெண்டுகளைக் கொண்ட இந்த இராணுவ அணி மாலிக்குப் புறப்படத் தயாராகியுள்ள நிலையில், ஐ.நா அமைதிப் படையிலிருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்திருக்கிறது.
இறுதிக்கட்ட போரில் குற்றச் சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இலங்கை இராணுவம் அதற்குப் பொறுப்பு கூறாத நிலையில் ஐ.நா அமைதி காப்பு நடவடிக்கைகளிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஏற்கனவே பலமுறை இந்த கோரிக்கைகளை விடுத்திருந்தார்.
கடந்த 2019 ம் ஆண்டு ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளிலிருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றும் முடிவு ஐ.நாவினால் எடுக்கப்பட்ட போதும் மாலி போன்ற சிக்கலான களங்களில் இலங்கை படைகளை பணியில் அமர்த்துவதற்கு ஐ.நா இன்னமும் தடை விதிக்கவில்லை. மாலி போன்ற ஆபத்தான நாடுகளில் பணியாற்றப் பல நாடுகள் பின்னடிப்பது இலங்கை ராணுவத்துக்குச் சாதகமான நிலையாக உள்ளது.
அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் விச்செல் பாச்லேட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா அமைதிப் படையில் இலங்கை படைகளின் பங்களிப்பை மீளாய்வு செய்ய வேண்டுமென்றும், கடுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென்றும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
ஐ.நா அமைதிப்படையில் பங்கேற்கும் இலங்கை படையினரின் மனித உரிமை பதிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுத் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இவ்வாறான நிலையில் தான மாலியில் பணியாற்றுவதற்கான அடுத்த அணியை இலங்கை ராணுவம் தயார்ப்படுத்தியிருக்கிறது.
இந்த அணிக்கான களப்பயிற்சி ஒத்திகைகள் யாவும் தற்போது ஐ.நாவின் அறிக்கைகளில் போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவரும் அமெரிக்காவினால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளவருமான இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் மேற்பார்வையிலேயே இடம்பெற்றுள்ளன.
குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இவ்வாறான அதிகாரிகளின் வழிகாட்டலில் தான் ஐ.நா அமைதிப் படைக்கு இலங்கை இராணுவத்தினர் தயார்ப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றனர் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.