இலங்கையை மலேரியா அற்ற நாடாக தொடர்ந்தும் பேணுவதற்கான முற்காப்பு நடவடிக்கை
எமது பிரதேசத்தில் மலேரியா நோய்க்கான ஒட்டுண்ணியுடன் ஒருவர் இருந்தாலே அந்த இடத்தில் மலேரியா மீண்டும் விரைவாக பரவும் அபாயம் உள்ளது என வடமாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் (A.Ketheeswaran)தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை 2016 ஆம் ஆண்டு முதல் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மலேரியா தொற்று பரவவில்லை.எனினும் கடந்த ஆண்டுகளில் மலேரியா பரம்பல் அதிகமாக காணப்படும்.
இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகள் போன்ற வேறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் மலேரியா தொற்றுடன் பலர் இனங்காணப்பட்டுள்ளனர். இது மலேரியா அற்ற நாடாக எமது நாட்டை பேணுவதில் நாம் எதிர் நோக்கும் மிகப்பெரிய சவாலாகும்.
கடந்த சில வாரங்களில் மலேரியா தொற்றுடன் இருவர் யாழ். மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மலேரியா பரம்பல் அதிகமாக காணப்படும் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களாவர்.
மலேரியாவை பரப்பும் அனோபிலிஸ் வகை நுளம்புகள் பெருமளவாக எமது பிரதேசத்தில் காணப்படுகின்றன.
மேலும் அண்மைக் காலங்களாக நகர்ப்புற மலேரியாவை பரப்பக் கூடிய அனோபிலிஸ் ஸ்டெபென்சி வகை நுளம்புகளும் எமது பிரேதேசங்களில் காணப்படுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையானது மலேரியா நோயை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியம் வகை ஒட்டுண்ணிகளை மனித உடலிலிருந்தும், அதை காவிப்பரப்பும் நுளம்புகளில் இருந்தும் ஒழித்ததன் மூலமே மலேரியா அற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.
எனவே காவிகள் பெருமளவாக காணப்படும் எமது பிரதேசத்தில் மலேரியா நோய்க்கான ஒட்டுண்ணியுடன் ஒருவர் இருந்தாலே அவ் இடத்தில் மலேரியா மீண்டும் விரைவாக பரவும் அபாயம் உள்ளது.
எனவே மலேரியா நோய் அதிகம் காணப்படுகின்ற நாடுகளுக்கு செல்பவர்கள் முற்காப்பாக தடுப்பு மருந்துகளை ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே உரிய முறையில் உள்ளெடுப்பதன் மூலம் தமக்கு மலேரியா தொற்று ஏற்படுவதை தடுக்கலாம்.
எனவே ஆபிரிக்க நாடுகள் மற்றும் இந்தியா செல்ல இருப்பவர்கள் மலேரியா நோயில் இருந்து தம்மை காத்துக்கொள்வதற்காக தமது பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்வதன் மூலம், அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலோ அல்லது சுகாதார கிராமம், பண்ணையில் அமைந்துள்ள பிராந்திய மலேரியா தடை இயக்க பணிமனையிலோ (தொ.பே.இல 021- 222 7924) தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் இவர்கள் மலேரியா பரம்பல் அதிகமாக காணப்படும் நாடுகளில் தங்கி இருக்கும் காலப்பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் தடுப்பு மருந்துகளை தொடர்ந்து உள்ளெடுப்பதோடு பயணம் நிறைவுற்று நாடு திரும்பிய பின்பும் நான்கு வாரங்கள் நிறைவுறும் வரை வாரத்திற்கு ஒருமுறை தடுப்பு மருந்துகளை தொடர்ந்து எடுக்க வேண்டும்.
அவ்வாறே ஒரு வருடத்திற்குள் காய்ச்சல் ஏற்படின் உங்கள் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று தங்கள் பயணம் தொடர்பான விபரங்களை வைத்தியருக்கு வழங்குவதுடன் மலேரியா நோய்க்காக குருதியினை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
மேலும், இவ்வாறான பயணங்களை மேற்கொள்ளும் யாராவது குருதிக்கொடையாளர்களாக இருந்தால் மூன்று வருடங்களுக்கு இரத்ததானம் வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri
