வலுவான கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள இலங்கை மற்றும் ரஷ்யா
இலங்கையும் ரஷ்யாவும் தங்களது வலுவான கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. மொஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இரண்டு நாடுகளும் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தின.
இலங்கை மற்றும் ரஷ்யக் கூட்டமைப்புக்கு இடையிலான 10வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் மொஸ்கோவில் உள்ள ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்றன.
இந்த ஆலோசனைக்கு இலங்கையின் வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே மற்றும் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தூதர் இகோர் மோர்குலோவ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சந்திப்பின் போது, இலங்கை மற்றும் ரஷ்யா இடையே அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார துறைகள் தொடர்பில் பேசப்பட்டன.
ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் ஜனிதா அபேவிக்ரம லியனகே, இலங்கையில் ரஷ்யாவின் தூதர் யூரி பி.மடேரி, இலங்கை மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகங்கள் மற்றும் மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆலோசனைகளில் கலந்து கொண்டனர்.