மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட விமானப்படை வீரர் தொடர்பில் வெளியான புதிய தகவல்
புதிய இணைப்பு
மட்டக்களப்பில் பணிபுரியும் விமானப்படை வீரர் ஒருவர் விடுமுறைக்கு வீடு சென்று திரும்பிய நிலையில் கடன் பிரச்சினை காரணமாக தன்னை தானே கடத்தி காட்டுபகுதி ஒன்றில் மரத்தில் கட்டிவைத்து நாடகமாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொட்பில் தெரியவருவதாவது,
விமானப்படை வீரர் ஒருவர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த விமானபடை வீரரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மட்டக்களப்பு செல்வதற்காக செவினப்பிட்டி சந்தியில் காத்திருந்த நிலையில், மனைவியுடன் கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது பின்னால் தனியார் வாகனம் ஒன்றில் வந்த அடையாளந்தெரியாதோரால் தான் தலையில் தாக்கப்பட்டதாகவும் , தனது முகத்தை மூடிதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் தன்னை அந்த வாகனத்தில் ஏற்றிகொண்டு சுமார் 2 மணித்தியால பிரயாணத்தின் பின்னர் ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 500 மீற்றர் பிரதான வீதியிலுள்ள செங்கல் வாடி ஒன்றுக்கு அருகில் அவரின் ரவுசர் சேட் என்பவற்றை கழற்றி உள் ஆடையுடன் காலையும் கையையும் கயிற்றால் கட்டி மரத்துடன் கட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த மரத்தில் “முரட்டு அரசியலுக்காக உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகின்றார்கள்“ என வாசம் எழுதப்பட்டு பதாகை ஒன்றினையும் தொங்கவிட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இச் சம்பவத்தையடுத்து சம்பவ இடத்திற்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி சென்று சம்பவம் தொடபான விசாரணையை மேற்கொண்டதுடன் குறித்த விமானபடை வீரர் தனக்கு இப்படித்தான் நடந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சம்பத்தில் படைவீரருக்கு எதுவிதமான அடிகாயங்கள் இல்லாததையடுத்து அவர் மேல் ஏற்பட்ட சந்தேகத்தினையடுத்து மீண்டும் குறித்த விமானபடைவீரரிடம் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, அவர் கையடக்க தொலைபேசி ஊடாக விளையாட்டு ஒன்றில் அதிகபணத்தை இழந்துள்ளதாகவும் முகாமில் சக படைவீரர்களிடம் கடனாக பணம்வாங்கி அந்த விளையாட்டில் இழந்ததையடுத்து கடனாளியாகியுள்ளார்.
எனவே இதற்கு தீர்வு காண்பதற்காக தான் தன்னைதானே கயிற்றால் கட்டி கொண்டு இவ்வாறு செயற்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இது தொடர்பில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: பவன்
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பில் பணிபுரியும் விமானப்படை வீரர் ஒருவர் அடையாளந்தெரியாத குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு்ள்ளார்.
விமானப்படை வீரர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளார்.
விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
வீட்டிலிருந்து கடமை நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்த வேளையில் நேற்று (27) மாலை அரலகங்வில பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த குழுவினர் விமானப்படை வீரரின் ஆடைகளை அகற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அருகே “முரட்டு அரசியலுக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகிறார்கள்” என்று தமிழ் மொழியில் எழுதப்பட்ட பதாகை ஒன்றும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், காயமடைந்த விமானப்படை வீரர் தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.