அபிஷேக் சர்மாவின் சதத்துடன் அபார வெற்றிப்பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி! புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
ஐ.பி.எல். 2025 தொடரின் 27ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி(SRH) அபாரமான வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐதராபாத்தில் இன்று(12) நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள்(PBKS) பலப்பரீட்சை நடத்தின.
பஞ்சாப் கிங்ஸ் அணி
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பாட்டம் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ஓட்டங்கள் குவித்தது.
பிரியன்ஷ் ஆர்யன் 36 ஓட்டங்களும், பிரப்சிம்ரன் சிங் 42 ஓட்டங்களும் எடுத்தனர்.
அணித்தலைவர் ஷ்ரேயஸ் ஐயர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். ஷ்ரேயஸ் ஐயர் 36 பந்தில் 82 ஓட்டங்களும் நேஹல் வதேரா 27 ஓட்டங்களும் எடுத்தார்.
இறுதியில் விளையாடிய ஸ்டோய்னிஸ் 11 பந்தில் 34 ஓட்டங்கள் எடுத்தார். ஐதராபாத் அணி சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இமாலய இலக்கு
இதையடுத்து, 246 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் முதல் பந்தில் இருந்தே அபாரமாக விளையாட தொடங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 66 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா சதமடித்து 141 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் ஐதராபாத் அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.பஞ்சாப் அணியின் 2ஆவது தோல்வி இதுவாகும்.
இந்த வெற்றியின் மூலம் 10ஆவது இடத்திலிருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 8 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.