உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஆப்பு வைத்துள்ள ரணில்! ஸ்ரீநேசன்
கடந்த 2020 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த தற்போதைய ஜனாதிபதி ரணில், தனது கட்சி சார்பாக ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெற்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தேசியப் பட்டியல் ஆசனம் மூலமாக காலம் தாழ்த்தி சங்கடத்துடன் நாடாளுமன்றத்தினுள் அவர் நுழைந்தார்.
மொட்டுக் கட்சியினரின் தவறான சமூக பொருளாதார அரசியல் சார்ந்த எதேச்சையான போக்குகளால், மக்களின் கிளர்ச்சி மூலமாக கோட்டாபய பதவி இழந்தார்.
மக்களாணையை இழந்த ஆட்சியாளர்கள்
மின்தடை, எரிபொருள் தட்டுப்பாடு, பணவீக்கம், பொருட்கள் தட்டுப்பாடு, அசுர விலையேற்றம் போன்ற விடயங்களால் ராஜபக்ச ஆட்சியாளர்கள் மக்கள் ஆணையை இழக்க நேர்ந்தது.
ஆட்சியாளர்களின் பலவீனமான செயற்பாடுகள் ரணிலுக்கு பலத்தை அளித்தது, அதனால் ரணில் பிரதமராகிப் பின்னர் மக்களாணை இல்லாமல், நாடாளுமன்றம் மூலமாக ஜனாதிபதியுமானார். இது ஆச்சரியமான நிகழ்வாகும்.
தற்போதைய நிலையில் ஜனாதிபதி மற்றும் ராஜபக்ச தரப்பினர் மக்களாணையை இழந்து நிற்பதை அறிய முடிகின்றது. அண்மையில் 2023 ஜனவரி மாதத்தில் இலங்கை சுகாதாரக் கொள்கை நிறுவகம் மாதிரி அபிப்பிராய வாக்கெடுப்பு ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் ஜே.வி.பி 32 வீதம், ஐக்கிய மக்கள் சக்தி 31 வீதம், ஐக்கிய தேசியக் கட்சி 9 வீதம், பொதுஜனப்பெரமுன 8 வீதம், தமிழரசுக்கட்சி 5 வீதம், சுதந்திரக்கட்சி 1வீதம் என்றும், இதர கட்சிகள் 14வீதம் என்ற வகையிலும் அந்தத் தகவல் அமைந்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
இந்த ஆய்வறிக்கை ஜனாதிபதி மற்றும் மகிந்த தரப்பை அச்சமடையச் செய்திருக்கலாம். அதன் விளைவாக தேர்தலை ஜனாதிபதி ஒத்தி வைத்துள்ளார் என அறியப்படுகிறது.
உள்ளூராட்சித் தேர்தலி்ல் மக்களாணை ஆட்சியாளர்களுக்கு எதிராக அமைந்தால், அடுத்து நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல் என்பவற்றை நடாத்துமாறு, புதிதாக உள்ளூராட்சி சபைகளில் ஆணை பெற்ற கட்சிகள், மாற்றத்தை விரும்பும் மக்கள் பலமான பேரெழுச்சிகளை மேற்கொள்வர். அதனை ஆட்சியாளர்களால் எதிர்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்.
இதனை ஆழமாகப் புரிந்த ஜனாதிபதி உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஆப்பு வைத்துள்ளார் என்பதே உண்மையான நிலைமையாகும்.
உள்ளூராட்சித் தேர்தலைத்தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஜனாதிபதி ஆற்றிய நாடாளுமன்ற உரை, சுமார் 85 சதவீதமான மக்களை எரிச்சலூட்டுவதாக அமைந்தது.
அவரது பேச்சு பொறுப்புணர்ச்சியோடு அமையாமல், நகைப்பும் நையாண்டியும் கலந்ததாக இருந்தது. மக்களை ஏமாளிகளாக்கும் கோமாளித்தனமான பேச்சாக அது அமைந்தது.
சுயாதீன தேர்தல் ஆணையகம்
இந்நிலையில், தனது அதிகாரத்தினால் சுயாதீன தேர்தல் ஆணையகத்தையும் செயலிழக்கச் செய்ய முடியும் என்பதை அப்பேச்சு வெளிப்படுத்தியது.
அதிகாரங்கள், கதிரைகள் என்பவை தற்காலிகமானவை என்பதை ஏறத்தாழ அரை நூற்றாண்டு நாடாளுமன்ற அனுபவமுள்ள ஜனாதிபதி ரணில் அறியாமல் இருப்பதுதான் ஆச்சரியமாகவுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் தன்னையும், தனது கட்சியையும் பூஜியமாக்கிய ரணில், ராஜபக்சர்களின் அறிவீன செயற்பாடுகளால் ஹீரோவானார்.
இப்போது தனது மாமா ஜெயவர்த்தனவாக மாறி, அதிகாரத்தை உச்சமாக சுவைக்க ஆரம்பித்து விட்டார். இதற்கான எதிர்வினை, மக்கள் எழுச்சியாக கிளர்ச்சியாக இறுதியில் மக்கள் தீர்ப்பாக மாறும் என்பதை ஜனாதிபதி அறிந்தே தீருவார்.
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் அவர்கள் கூறியது போல் மொட்டுக்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாத்தல், அவர்களுக்கு நட்டஈடு வழங்குதல், தேர்தலை நடத்தாமல் தவிர்த்தல் என்பவையே ஜனாதிபதியின் பிரதான முத்தொழில்களானதோ என்று மக்களை சிந்திக்க வைத்துள்ளது.
இதற்கான பதிலை மக்களும் எதிர்க்கட்சிகளும் விரைவாக அளிப்பார்கள் என்பதை எதிர்காலம் உணர்த்தும்.
அதிகாரத்தை சுவைத்தவர்கள் அதனை இழந்த பின்னர் அல்லற்படுவார்கள் என்பதை கோட்டாபய ஈராண்டுகளில் உணர்ந்தார்.தற்போதைய ஜனாதிபதியும் உணர்ந்தேயாவார் என தெரிவித்துள்ளார்.