மணிவண்ணனை விடுதலை செய்யுமாறு ஸ்ரீதரன் கோரிக்கை
யாழ். மாநகரசபையின் மேயர் மணிவண்ணனை விடுதலை செய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் சிறப்புரிமை கேள்வி ஒன்றை எழுப்பியதன் மூலம் அவர் இந்த விடயத்தை இன்றைய தினம் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாநகரைத் தூய்மையாகப் பேணும் நோக்கில் கண்காணிப்பு பாதுகாப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபையிலும் இவ்வாறான ஓர் பிரிவு காணப்படுகிறது. மணிவண்ணனின் செயற்பாட்டுக்குப் பயங்கரவாத மூலாம் பூசப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் சீருடையை ஒத்த சீருடையே யாழ்ப்பாண மாநகரசபையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாண மேயர் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் மன வருத்தத்திற்குரியது.
இந்த நாட்டிலே ஜனநாயகம் பேணப்பட வேண்டுமாயின் இந்த விடயத்தைக் கரிசனையுடன் கையாள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது மிகவும் ஆபத்தானது எனவும் உடனடியாக அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஸ்ரீதரன் கோரியுள்ளார்.